தமிழக தேர்தல் களம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
ராகுல் காந்தி பிரசாரம்
தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ராகுல் முதல் பிரசாரமே இன்று தான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவின் சதி முறியடிப்பு
பொன்னேரியில் பரப்புரை ஆற்றிய அவர், ”பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை தொகுதி மறுவரையறை மசோதாவுடன் இணைத்து, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்க பாஜக சதித்திட்டம் தீட்டியது. அதை நாம் போராடி முறியடித்தோம்.
தென்மாநிலங்கள் முக்கியத்துவம் குறைப்பு
நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் குரலை நசுக்க பாஜக முயற்சிக்கிறது. பாஜக, டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆளப் பார்க்கிறது. அரசியலமைப்பை பலவீனப்படுத்த அவர்கள் திட்டமிட்டனர். தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாற்றை அழிக்க நினைக்கிறது பாஜக .
காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது
நாங்கள் எப்போதும் அதை அனுமதிக்க மாட்டோம். பாஜக, மக்களை புறக்கணிக்கிறது; அவர்களுக்கு தமிழ் மக்கள் யார் என புரியவில்லை. தமிழ் மக்களுக்கு ஆயிரமாயிரம் ஆண்டு கால வரலாறு உள்ளது.
தமிழ் மக்களுக்கு தனியிடம்
தமிழ்நாட்டுக்கு வந்ததை பெருமையாக கருதுகிறேன், கடந்த சில ஆண்டுகளாக தமிழக மக்களுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்தியுள்ளேன். எனது இதயத்தில் தமிழக மக்களுக்கென்று தனி இடம் உண்டு.
தமிழ்நாட்டை தொடவே முடியாது
தமிழ்நாட்டை, தமிழ் மொழியை, கலாச்சாரத்தை பாஜக, ஆர்எஸ்எஸ் தாக்கும்போது என்னை தமிழனாகவே உணர்கிறேன். தமிழ்நாட்டு மக்களின் மீதும் தமிழ் மொழியின்மீதும் அன்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
நான் தமிழ்நாட்டில் பிறக்கா விட்டாலும், என் குடும்பம் தமிழ்நாட்டிலிருந்து வராவிட்டாலும் தமிழ் மண்ணை சேர்ந்தவனாகவே உணர்கிறேன். பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸால் எப்போதும் தமிழ்நாட்டை தொட முடியாது.
அதிமுகவை பாஜக மிரட்டுகிறது
எங்கள் கூட்டாளிகளை நாங்கள் சமமாக பார்க்கிறோம். திமுகவைப் போன்று அதிமுகவும் நீண்ட பாரம்பரியத்தை கொண்டிருந்தது.
ஆனால் அந்த அதிமுக தற்போது அழிந்து விட்டது. தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். பெரியாரின் கொள்கைகளை ஆர்எஸ்எஸ், பாஜக நசுக்கப்பார்க்கிறது.
நடைபெற இருப்பது அரசியல் போர்
அவரின் சமூக நீதிக் கொள்கைகளை அழிக்கப் பார்க்கிறார்கள். இந்தியாவையே 2, 3 கம்பெனிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அவர்கள் நினைக்கிறார்கள்.
எனவே, முதலில் இது ஒரு கொள்கைப்போர். அதன் பிறகே இது அரசியல் போர்.
முற்காலங்களில் ராணுவம் மூலம் போர் தொடுக்கப்பட்டது. ஆனால், தற்போது பாஜக ராணுவம் இல்லாமல் போரை தொடுக்கிறது.
தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாற்றை அவர்கள் அழிக்க நினைக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது”, என்று ராகுல் காந்தி பரப்புரை செய்தார்.
=============