சென்னையில் இன்று (செப்டம்பர் 10) மற்றும் நாளை (செப்டம்பர் 11) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் வானிலை மையங்கள் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்படி, நகரின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதற்காக இடியுடன் கூடிய மழைக்கான எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 11-ஆம் தேதி சென்னையில் பொதுவாக மேகமூட்டமான வானிலை நிலவும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக IMD தெரிவித்துள்ளது.
அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் பரவலாக மழை தொடரும் என்றும் வானிலை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் திறந்த வெளிப் பகுதிகளில் தேவையற்ற நேரங்களில் நிற்பதை தவிர்க்கவும், வாகன ஓட்டிகள் கவனமாக பயணிக்கவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் வானிலை மாற்றங்களை தொடர்ந்து கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு :
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.