R.B. Udayakumar criticized Chief Minister Stalin for being scared of Edappadi Palaniswami's rise 
தமிழ்நாடு

EPS : எடப்பாடி பயணத்தால் ஸ்டாலினுக்கு பயம் : ஆர்.பி. உதயகுமார்

RB Udhayakumar on EPS Road Show : எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயணத்தை கண்டு முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டதாக, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்து உள்ளார்.

Kannan

RB Udhayakumar on EPS Road Show : சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது அரசியல் சுற்றுப் பயணத்தை தொடங்கி இருக்கிறார். ” மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் “ என்ற முழக்கத்துடன் அவர் மக்களை சந்தித்து வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி எழுச்சி பயணம் :

இந்தப் பயணம் குறித்து கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார்,

”தள்ளாடும் தமிழகம் தலை நிமிர, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழ்ந்திட, போதை கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட, அராஜ ஆட்சியை அகற்றிட, குடும்ப ஆட்சியின் ஊழலை அம்பலப்படுத்திட, தீய சக்தி கும்பலை வீழ்த்தி தமிழகத்தை ஒளிமயமாக்கிட, சாமானிய மக்களின் குரலாக உங்களில் ஒருவராக எடப்பாடியாரின் எழுச்சி பயணம் அமைந்து இருக்கிறது.

முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது :

அவருக்கு மக்களிடத்தில் கிடைக்கின்ற வரவேற்பை பார்த்து, முதலமைச்சருக்கு நடுக்கம் ஏற்பட்டு, தலைமைச் செயலகத்தில் நான்கு துறைகளின் முதன்மைச் செயலாளர்களை அழைத்து 4 மணி நேரம் ஆலோசனை நடத்துகிறார். திட்டங்கள் மக்களுக்கு சென்றதா? சென்றடையவில்லையா என்று என்று கேட்கிறார்.

திட்டங்களை பறிப்பது திமுகதான் :

இன்றைக்கு எடப்பாடியார் மக்களுக்கு முன்னாள் வைக்கின்ற அந்த வீர உரை, எழுச்சி உரை, தலைமை உரை ஒரு வரலாற்று பேரூரையாக அமைந்திருக்கிறது.திட்டங்களை கொடுப்பது, திட்டங்களை வகுப்பது அம்மாவின் அரசு ஆனால் அந்த திட்டங்களை எல்லாம் பறிப்பது திமுகவின் அரசாகும். அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் எங்கே போனது?

கோட்டையில் ஓட்டை :

நிதிநிலை அறிக்கையில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம் வழங்குவோம் என்று கூறுவது யாரை ஏமாற்ற? உற்பத்தி செய்கிறவர் கூட இவ்வளவு கணினிகளை எப்படி தர முடியும்? கல்லூரி மாணவர்களை ஏன் எப்படி மக்கள் ஏமாற்றுகிறீர்கள்? ஏன் நான்காண்டுகளாக கொடுக்கவில்லை? இப்போது கோட்டையில் ஓட்டை விழுந்து விடும் என்பதால் பதறுகிறீர்கள்.

மக்களை காப்பாற்றுவது திமுக அரசா? :

மக்களை காப்பாற்ற வேண்டிய அரசே ,ஒரு படுகொலை செய்தால் எங்கே போகிறது என்று நீதிமன்றமே கூறி உள்ளது. பேரவையில் எடப்பாடியார் பேச்சை நேரலை துண்டிப்பு செய்தீர்கள். ஆனால் வெற்றி பயணத்திற்கு மக்கள் பேரலையாய் வருவதை கண்டு உங்களுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது” என்று ஆர்.பி. உதயகுமார்(RB Udhayakumar) கடுமையாக சாடியுள்ளார்.

====