காவிரி நீர் - கர்நாடகா பிடிவாதம்
CM Joseph Vijay and Karnataka CM DK Shivakumar Expected To Meet In Person Over Cauvery Water Issue
தமிழகத்திற்கு காவிரியில் உரிய நீரை கொடுக்காமல் கர்நாடாக அரசு முரண்டு பிடிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் மாதம் எவ்வளவு தண்ணீர் தர வேண்டும் என்று, வகுத்து கொடுத்து இருக்கும் நெறிமுறைகளையும் பின்பற்றுவதில்லை.
கைவிரிக்கும் கர்நாடகம்
கர்நாடகம் 177 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு விடுவித்து இருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் அணைகள் நிரம்பிய பிறகு, உபரி நீரை மட்டுமே தமிழகத்திற்கு தந்து வருகிறது.
மேட்டூர் அணை திறப்பு இல்லை
கர்நாடகாவில் பருவமழை போதிய அளவு பெய்யவில்லை, அணைகளில் போதுமான அளவு நீர் இல்லை என்று கூறி, தண்ணீரை திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடகம். இதனால், ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.
வறண்டு போன டெல்டா மாவட்டங்கள்
இதன் காரணமாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முடங்கி விட்டது. சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகி நிற்கிறது. டெல்டா மாவட்டங்களில் நீர் நிலைகள் வறண்டு கிடக்கின்றன.
கர்நாடக முதல்வருடன் தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை
தமிழக அரசு, முதல்வர் விஜயும் மவுனம் காப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், காவிரி நீர் பகிர்வு மற்றும் மேகதாது அணைத் திட்டம் குறித்து விவாதிப்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு செல்கிறாரா முதல்வர் விஜய்?
இந்தச் சந்திப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் அதாவது ஆகஸ்டு 3ல் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த பிரச்னையை சுமூகமாக முடிக்க முதலமைச்சர் விஜய் பெங்களூருவிற்கே சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
தமிழகத்தை வஞ்சிக்கும் கர்நாடகம்
தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 TMC காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்பது விதி. ஆனால் ஜூன் மாதம் தரவேண்டிய 9.19 டிஎம்சி தண்ணீருக்கு பதில் 2.91 டிஎம்சி நீரை மட்டுமே கர்நாடகா வழங்கியுள்ளது.
காவிரி ஆணையக் கூட்டம் - கர்நாடகம் மறுப்பு
ஜூலை மாதம் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் 31.24 TMC நீரும் இன்றுவரை முழுமையாகத் திறந்துவிடாத சூழல் நிலவுகிறது.
22ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், கர்நாடக அணைகளில் பெங்களூர் மாநகரின் குடிநீர் தேவைக்காக மட்டும் தான் தண்ணீர் இருப்பதாகவும், தமிழகத்திற்கு திறந்து விட முடியாது என்றும் கர்நாடக அரசு கூறியது.
முதல்வர் விஜய் அவசர ஆலோசனை
மாநிலத்துக்கு உரிய நீர் பெறுவதற்கான, சட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அண்மையில் முதலமைச்சர் விஜய் தலைமையில், தலைமைச் செயலகத்தில், அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், நிர்மல்குமார், தலைமைச் செயலர் சாய்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எதிர்பார்ப்பில் விவசாயிகள், பொதுமக்கள்
இந்நிலையில் தான், கர்நாடக முதலமைச்சர் சிவக்குமாரை தானே நேரில் சந்தித்து பேச முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஏதேனும் சுமூக முடிவு எட்டப்பட்டால் காவிரி நீரை நம்பியுள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெருமகிழ்ச்சி கொள்வார்கள்.
====================