Edappadi Palanisamy Condemns DMK on Salem Bus Accident : சேலம் மாவட்டம் அரியலூர் பகுதியில் அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பைக் மற்றும் டெம்போ மீது மோதியதில் 5 மாத குழந்தை உட்பட 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கைக்குழந்தை உட்பட 7 பேர் உயிரிழப்பு
அரசு பேருந்து கட்டுபாட்டை இழந்து மோதியதில் எதிரே பைக்கில் வந்த தாய் மகன் மற்றும் டெம்போவில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 மாத கைக்குழந்தை ஜீவிகா , ஐந்து வயது சிறுமி நித்திஸ்கா உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்
இச்சம்பவம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
வருத்தத்திற்குரிய இத்தகவல் அறிந்து மிகுந்த துயருற்றேன்
சேலம் - உத்தமசோழபுரம் பகுதியில், கோயம்புத்தூரிலிருந்து சேலம் நோக்கி வந்த தமிழ்நாடு அரசு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
சாலையோர தடுப்பை உடைத்து எதிர்புறம் சென்ற வாகனங்கள் மீது அதிவேகமாக மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர் என்ற செய்திகள் வருகின்றன, வருத்தத்திற்குரிய இத்தகவல் அறிந்து மிகுந்த துயருற்றேன்.
தொடர்கதையாகும் அரசு பேருந்து விபத்துகள்
தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி உள்ள நிலையில், இந்த ஆட்சியில் அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதையே இந்த சம்பவம் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.
அஇஅதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலும்,வருத்தங்களும்
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அஇஅதிமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம்பெற்று இல்லம் திரும்ப இறைவனை வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.