'Singappen Special Force SSF' project announced by Chief Minister Vijaybegun operations in Salem  google
தமிழ்நாடு

சேலத்தில் களமிறங்கிய ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ : பெண் போலீசார் கண்காணிப்பு : மகளிர் பாதுகாப்பில் அதீத கவனம்!

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதல்வர் விஜய் அறிவித்த ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டம் (Singappen Special Force SSF) சேலம் மாநகராட்சியில் பணியை தொடங்கி விட்டது.

Kannan

பெண்கள் பாதுகாப்பு - விஜய் வாக்குறுதி

தவெகவின் தேர்தல் பிரசாரத்தின் போதே, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் உறுதியளித்து இருந்தார்.

‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’

அந்தவகையில் முதல்வராக பொறுப்பேற்றவுடன், பெண்கள் பாதுகாப்புக்கு என தமிழகத்தில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ தொடங்கப்படும் என்று விஜய் அறிவித்து, அதற்கான ஆணையில் கையெழுத்திட்டார்.

முதன்முறையாக சேலத்தில் அறிமுகம்

இதை உடனே செயல்படுத்தும் விதமாக, தமிழகத்தில் முதல்முறையாக சேலம் மாநகர காவல் துறையில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

களமிறங்கிய சிறப்பு அதிரடிப்படை

பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் , சேலம் மாநகர காவல் ஆணையர் அனில் குமார் கிரி மேற்பார்வையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" அமைக்கப்பட்டுள்ளது.

பெண்களை கொண்ட காவல்படை

சூரமங்கலம் சரக உதவி ஆணையர் ரமளி ராமலட்சுமி கண்காணிப்பில், எஸ் ஐ., அருள்மொழி. எஸ் எஸ் ஐ., க்கள் அம்சவள்ளி, சத்தியவதி, பெண் தலைமை காவலர்கள் பிரேமலதா, மங்கையர்க்கரசி ஆகியோரைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

அதிரடிப்படை வாகனத்தின் ஓட்டுநர் மட்டும் ஆண் காவலர் ஆவார்.

சிங்கப்பெண் அதிரடிப்படை எப்படி செயல்படும்

* குற்றச் சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து கண்காணித்தல்

* பொது இடங்களில் தொடர்ந்து ரோந்து மேற்கொண்டு, பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குதல்

* பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள். கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு

* சட்டவிரோத மற்றும் பெண்களுக்கு எதிரான செயல்களை தடுக்க விரைந்து நடவடிக்கை

* பெறப்படும் புகார்களுக்கு உடனடி மற்றும் உரிய நடவடிக்கை

* பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் நபர்களை மீட்டு அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்தல்

* தேவையான உதவிகள் மற்றும் ஆதரவுகள் உரிய நேரத்தில் கிடைக்க ஏற்பாடு

* சமூக நலத்துறை கல்வித்துறை மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

* சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் இணைத்து பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை

* பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தடுப்பு மற்றும் பாதுகாப்பு உத்திகளை முதன்மை இலக்காகக் கொண்டு செயல்பாடு

இவை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் முக்கிய நோக்கங்கள் ஆகும். முதற்கட்டமாக காவல்துறை தலைமையக நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் இந்தப் படை செயல்படும்.

தனியாக ரோந்து வாகனம்

சிறப்பு படையினருக்கு தேவையான நான்கு சக்கர வாகனம் சாதனங்கள், Body Worn Camera மற்றும் இதர வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் பணியை தொடங்கி வைத்த சேலம் மாநகர காவல் ஆணையர் அணில் குமார் கிரி அதிரடிப்படையினருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்

புகார் செய்தால் உடனே நடவடிக்கை

பின்னர் மாநகர காவல் ஆணையர் அனில் குமார் கிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், “பெண்கள் பிரச்சினை தொடர்பாக புகார் செய்தால் அல்லது அவசர அழைப்பிற்கு தொடர்பு கொண்டால் உடனே சிங்கப்பெண் அதிரடி படை அங்கு சென்று தேவையான உதவிகள் மற்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார்.

==============