சோனியா காந்தி
புதுடெல்லி: 60 ஆண்டு கால இந்திய வாழ்க்கையின் வலிகளை முதன்முறையாக புத்தகமாக எழுதியுள்ளார் சோனியா காந்தி.
இந்திய அரசியலின் மிக சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவராக கருதப்படுபவர் சோனியா காந்தி. எப்போதும் ஒரு புதிரான ஆளுமையாகவே பார்க்கப்படுபவர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான இவருக்கு வயது 79.
சோனியாவின் சுயசரிதை புத்தகம்
544 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம், அமெரிக்காவின் புகழ் பெற்ற பதிப்பகமான ‘ஆல்ஃபிரட் ஏ நாஃப்’ மூலம் வரும் நவம்பர் 10 அன்று உலகளவில் வெளியாகிறது. அன்றைய தினம் அச்சுப் புத்தகம் மற்றும் மின்புத்தக வடிவில் வெளியிடப்படும்.
இதன் ஒலிப்பதிப்பு பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனத்தால் வெளியிடப்படும். முதற்கட்டமாக 1,00,000 பிரதிகள் அச்சிடப்படும் என பதிப்பகம் தெரிவித்துள்ளது.
புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள்
இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சில பகுதிகள் தற்போது வெளியாகி சர்வதேச மற்றும் இந்திய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேம்பிரிட்ஜ் காதல் முதல் மாமியார் படுகொலை வரை
இந்த சுயசரிதை புத்தகம், 1965-ல் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 19 வயது மாணவியாக இருந்த சோனியா மைனோ, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பேரனும், இந்திரா காந்தியின் மகனுமான ராஜீவ் காந்தியை முதன் முதலில் சந்தித்து காதல் வயப்பட்ட தருணத்தில் இருந்து தொடங்குகிறது.
இத்தாலியின் எளிய கிராமம்
2-ம் உலகப் போருக்குப் பிந்தைய இத்தாலியின் எளிய கிராமத்து சூழலில் வளர்ந்த ஒரு பெண், இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்திற்குள் மருமகளாக நுழைந்த பிறகு சந்தித்த சவால்கள் இதில் விவரிக்கப்பட்டுள்ளன.
இந்திய கலாச்சாரத்திற்கு மாறியது
இந்தியா வந்த புதிதில் அவர் புடவை கட்டக் கற்றுக் கொண்டது, இந்தி மொழியை கற்ற விதம், இந்திய உணவு முறைகளை ரசித்தது போன்ற சுவாரஸ்யமான பல நினைவுகளையும் சோனியா காந்தி பகிர்ந்துள்ளார்.
இந்திரா படுகொலையோடு அனைத்தும் மாறியது
1984-ல் மாமியாரும் அன்றைய பிரதமருமான இந்திரா காந்தி தன் கண் முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட போது, சோனியா காந்தியின் அமைதியான குடும்ப வாழ்க்கை முற்றிலும் தலைகீழாக மாறியது என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசியலுக்கு வந்த ராஜீவ் காந்தி
இந்திரா காந்தியின் மரணத்தை தொடர்ந்து, அரசியலுக்கு வர சற்றும் விருப்பமில்லாத ராஜீவ் காந்தி பிரதமராக பொறுப்பேற்றார்.
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் படுகொலை
அதன் பின்னர், அடுத்த 7 ஆண்டுகளில் 1991ம் ஆண்டு, தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ் காந்தியும் மனித வெடிகுண்டால் மிக கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த தொடர் மரணங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பேரிழப்புகள் குறித்து சோனியா காந்தி இந்த புத்தகத்தில் மிக உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
இழப்புகளே என்னை அரசியலில் தள்ளின
இந்த நூலில் சோனியா காந்தி, "அதுவரை எனது தனிப்பட்ட வாழ்க்கையையும், ரகசியங்களையும் நான் மிகவும் தீவிரமாக பாதுகாத்து வந்தேன்.
ஆனால், என் வாழ்க்கையில் ஏற்பட்ட இதயத்தை நொறுக்கிய அந்த சம்பவம் மற்றும் ஈடு செய்ய முடியாத இழப்புகளும் தான் என்னை எனக்கு சற்றும் தொடர்பில்லாத இந்த அரசியல் உலகிற்குள் வலுக்கட்டாயமாக தள்ளிவிட்டன" என்று குறிப்பிட்டுளார்.
சுயசரிதை எழுதுவது எளிதல்ல
"என் சொந்த வாழ்க்கையைப் பற்றி எழுதுவது எனக்கு அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை. அதற்கு என் மனதைத் திறந்து, நான் இத்தனை காலம் எனக்குள் ஆழமாக பூட்டி வைத்திருந்த மிக அந்தரங்கமான தருணங்களையும், வலிகளையும் உலகத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது" என்று தயக்கங்களை உடைத்து இருக்கிறார் சோனியா காந்தி
பிரதமர் பதவியை நிராகரித்த ரகசியம்
கணவரின் மரணத்திற்குப் பிறகு பல ஆண்டுகள் தீவிர அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த சோனியா காந்தி, பின்னர் காங்கிரஸின் நீண்டகால தலைவராக பொறுப்பேற்று கட்சியை வழி நடத்தினார்.
குறிப்பாக, 2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்று, ஒட்டுமொத்த தேசமே அவர் பிரதமராவார் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தது.
நள்ளிரவில் மாறிய வரலாறு
ஆனால், அன்று நள்ளிரவில், அவர் எடுத்த அதிரடி முடிவு இந்திய வரலாற்றையே மாற்றியது. தன்னை தேடி வந்த மிக உயரிய பிரதமர் பதவியை எதனால் நிராகரித்தார்?
மன்மோகன் சிங்கை பிரதமராக்கிய அந்த வியூகத்தின் பின்னணியில் இருந்த உண்மையான காரணங்கள் மற்றும் அரசியல் அழுத்தங்கள் என்னென்ன? என்பதை இந்த புத்தகத்தில் அவர் முதல்முறையாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
"இந்தியா எனக்கு சொந்தமான அழகான தேசம்"
மேலும், "நான் படிப்படியாக அரசியலில் இருந்து விலகி, என் கடந்த காலத்தை திரும்பி பார்க்கும் போது, ஒரு மெல்லிய அழகான காதல் தான் என் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் வழிநடத்தியது என்பதை புரிந்து கொண்டேன்" என்று சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களை ஒரு சாட்சியாக நெருங்கி பார்த்த தனது இந்த வாழ்க்கை பயணத்தை, "நான் சார்ந்திருக்கும், எனக்கு சொந்தமான அழகான தேசத்தின் கதை" என்று நெகிழ்ச்சியுடன் சோனியா காந்தி நிறைவு செய்துள்ளார்.
====================