அதிமுகவில் பூகம்பம்
சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அதிமுகவில் பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 2021 தேர்தல் முதல் தொடர் தோல்விகளை கட்சி சந்தித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
25 எம்எல்ஏக்கள் போர்க்கொடி
தவெக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போதே, எடப்பாடி உத்தரவை மீறி அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.
அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேர் ராஜினாமா
சமாதான பேச்சுவார்த்தை பிறகு, இவர்களில் பலர் எடப்பாடி பக்கம் திரும்பினாலும், இதுவரை 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து இருக்கிறார்கள்.
நான்கு பேர் தவெகவில் இணைந்து விட்ட நிலையில், சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் நாளை தவெகவில் இணைகிறார்கள்.
அதிருப்தியில் எஸ்.பி. வேலுமணி
அரசை ஆதரித்து வாக்களித்த எம்எல்ஏக்களின் கட்சி பொறுப்புகளை எடப்பாடி பறித்து விட்டார். அந்த வகையில், கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் முக்கிய முகமாக இருக்கும் எஸ்.பி. வேலுமணிக்கும் மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்படவில்லை.
ஆதரவாளர்களுடன் ஆலோசனை
அவரை சமாதானப்படுத்தும் விதமாக அதிமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பை எடப்பாடி வழங்கி இருக்கிறார்.
ஆனால், அதை ஏற்க எஸ்.பி.வேலுமணி தயாராக இல்லை. அதிருப்தியில் உள்ள அவர், தொண்டாமுத்தூரில், ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
எனக்கு பதவி வேண்டாம்
அப்போது பேசிய எஸ்.பி.வேலுமணி, தன்னை நம்பி வந்த தொண்டர்களையும் நிர்வாகிகளையும் விட்டுவிட்டு, தான் மட்டும் தனியாகப் பதவி வாங்கத் தயாராக இல்லை எனக் கூறினார்.
வேலுமணியின் இந்தப் பேச்சு அதிமுகவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தவெகவில் இணைய உள்ளீர்களா என்ற கேள்விக்கு "ஏன் அதிமுகவில் நான் இருக்கக் கூடாதா?. அதெல்லாம் இல்லை" என எஸ்.பி.வேலுமணி விளக்கமளித்து இருக்கிறார்.
நிர்வாகிகளுடன் எடப்பாடி ஆலோசனை
சட்டமன்ற தேர்தல் தோல்வி, கட்சி வளர்ச்சி குறித்து வரும் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த இருக்கிறார்.
தலைமை மாற்றம் - வியூகம்
அதன்பிறகு, தலைமை மாற்றம் என்ற இலக்கை நோக்கி எஸ்.பி. வேலுமணி காய் நகர்த்த இருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம், எடப்பாடிக்கு செக் வைக்க, வேலுமணியும், சி.வி. சண்முகமும் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி
எனவே, இனி வரும் நாட்கள் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலாகவே இருக்கும் என்றும் எப்படி சமாளிக்க போகிறார் என்றும் அதிமுகவினரே கேள்வி எழுப்புகின்றனர்.
=================