special resolution was unanimously passed in Assembly urgingCentral Govt to exempt TET AI generated
தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு ’டெட்’ தேர்வில் இருந்து விலக்கு : தமிழக அரசு ’தனித் தீர்மானம்’ : அனைத்து கட்சிகளும் ஆதரவு!

தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ‘டெட்’ (TET) தேர்வில் இருந்து மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டசபையில் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Kannan

சட்டசபையில் தனித் தீர்மானம்

பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கொண்டு வந்த இந்த தனித் தீர்மானத்துக்கு பாமக, சிபிஐ, சிபிஎம், அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தன.

அமைச்சர் ராஜ்மோகன்

ஆசிரியர் பணி என்பது வெறும் அறிவை போதிக்கும் தொழில் மட்டுமல்ல, அது மனித வளத்தை உருவாக்கி சமூகத்தின் எதிர்காலத்தை செதுக்கும் ஒரு உயரிய பொறுப்பாகும்.

ஆசிரியர்களின் தலையாய பணி

பாடத்திட்டங்களை மாணவர்களின் வயது மற்றும் புரிந்து கொள்ளும் திறனுக்கு ஏற்ப எளிமையாக கற்பித்தல், அவர்களின் கற்றல் குறைபாடுகளை கண்டறிந்து நிவர்த்தி செய்தல், அறிவோடு சேர்த்து நற்பண்புகள், சமூக பொறுப்பு,...

ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையை மாணவர்களிடம் வளர்த்தல், ஒவ்வொரு மாணவரிடமும் உள்ள தனித்துவமான திறமைகளான விளையாட்டு, பேச்சு, எழுத்து, அறிவியல் ஆர்வம் ஆகியவற்றை கண்டறிந்து ஊக்கப்படுத்துதல் ஆகியவை ஆசிரியர்களின் தலையாய பணியாக உள்ளது.

ஆசிரியர்களுக்கான ’டெட்’ தேர்வு

தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் (NCTE) 23.8.2010-ஆம் நாளில் தேதியிட்ட அறிவிப்பில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் செய்யப்படுவதற்குரிய ஒரு தகுதியாக ஆசிரியர் தகுதி தேர்வு (டெஸ்ட்) தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.

தகுதி தேர்வு கட்டாயம் - உச்ச நீதிமன்றம்

ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக, குறிப்பாக 15 முதல் 20 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித இடையூறும் இன்றி தங்களுடைய பணியை சிறப்பாக ஆற்றி வரும் நிலையில், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ல் ஆசிரியர் தகுதி தேர்ச்சி என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில்...

பணியில் இருக்கும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு நெருக்கடி

மேற்கண்ட உத்தரவினால் தமிழ்நாட்டில் சுமார் 3,28,701 அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் பதவி உயர்வினை பெற இயலும். மேலும் தேர்ச்சி பெறவில்லை எனில் பணியிழப்புக்கும் ஆளாக நேரிடும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பணியில் உள்ள ஆசிரியர்கள் 31.8.2028க்குள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் வாழ்வாதார உரிமை பாதிப்பு

இந்நிலையில் 15 முதல் 20 ஆண்டுகள் வரை தடையின்றி பணியாற்றி ஓய்வு பெறும் வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை தகுதி தேர்வு எழுத வலியுறுத்துவது, வற்புறுத்துவது அவர்களின் வாழ்வாதார உரிமையை பாதிக்கும் செயலாகும்.

எனவே இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு, நீண்டகால சேவை, வாழ்வாதாரம் மற்றும் நலன் ஆகியவற்றை பாதுகாக்கும் நோக்கில் இம்மாமன்றத்தில் பின்வரும் தீர்மானம் முன்மொழியப்படுகின்றது:

2010க்கு முன் சேர்ந்தோருக்கு விலக்கு

தமிழ்நாடு பள்ளிகளில் 23.8.2010-க்கு முன்பாக அன்றைய நடைமுறையில் இருந்த விதிமுறைகள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு அவர்களின் நீண்டகால பணி அனுபவம் மற்றும் பணி பாதுகாப்பை கருத்தில் கொண்டு...

ஆசிரியர் தகுதி தேர்வு ‘டெட்’ட்டில் இருந்து முழுமையான மற்றும் நிரந்தர விலக்கு அளிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.

சட்டத்தில் திருத்தம் அவசியம்

இதற்கேற்ப இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ன் பிரிவு 23-ல் உரிய சட்ட திருத்தம் மேற்கொண்டு 23.8.2010-க்கு முன்பாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்விலிருந்து விலக்களிக்கும் வகையில் தேவையான சட்டபூர்வ ஏற்பாடுகளை...

மத்திய அரசு மேற்கொண்டு தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் (NCTE) வழியாக இது தொடர்பான தெளிவான மற்றும் உரிமிக்க அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல் சுற்றறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்மாறு மத்திய அரசை பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.

மத்திய அரசுக்கு கோரிக்கை

மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம் நீண்ட காலமாகப் பணியாற்றி வரக்கூடிய ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட உரிய பணி பலன்கள் எவ்வித தடையும் இன்றி தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யுமாறு மத்திய அரசை பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.

தமிழக அரசின் தனித் தீர்மானத்திற்கு பாமக, இடதுசாரி கட்சிகள், அதிமுக, திமுக, காங்கிரஸ் முழு ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

============