ஒரு காலத்தில் இரும்புக்கோட்டை
ஒரு காலத்தில் இரும்புகோட்டை என்று அழைக்கப்பட்ட அதிமுக, இன்று கலகலத்து போய் இருக்கிறது. சசிகலா தினகரன், ஓபிஎஸ் வெளியேற்றத்தில் தொடங்கிய பிளவு ஓரளவு சமாளித்து தேர்தல்களை சந்தித்து வந்தார் எடப்பாடி பழனிசாமி.
சட்டமன்ற தேர்தலிலும், பாஜக, அமமுக, பாமகவோடு கூட்டணி அமைத்து, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாவிட்டாலும் 47 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது.
தொடர் தோல்வியில் அதிமுக
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, நடந்த உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல்கள், இடைத்தேர்தல்களில் பழனிசாமி தலைமையிலான அதிமுக தோல்வியையே சந்தித்தது.
இதனால், அதிமுக நிர்வாகிகள் சோர்வடைந்து அக்கட்சியில் இருந்து விலகி பல்வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.
அதிமுகவில் இருந்து 7% பேர் விலகல்
எடப்பாடி பழனிசாமி- ஓபிஎஸ் இடையே ஒற்றை தலைமைக்கான மோதலின் போது 7 சதவீத அதிமுகவினர் ஓபிஎஸ் பக்கம் சென்றனர். அவர்களில் 2 சதவீதம் பேர் மீண்டும் அதிமுகவிற்கு திரும்பினர்.
இதனால், பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் எடப்பாடியால் சிக்கலை சமாளிக்க முடிந்தது.
எடப்பாடி மீது கடும் அதிருப்தி
2026 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்விக்கு காரணத்தை ஆராயக் கோரி பொதுக் குழுவை கூட்டுமாறு சி.வி.சண்முகம், வேலுமணி உள்ளிட்டோர் கோரி வந்தனர். ஆனால், அதை ஏற்க எடப்பாடி விரும்பவில்லை.
தவெக அரசுக்கு ஆதரவு
இதனால் 21 எம்எல்ஏக்கள், தவெக அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த எடப்பாடி பழனிசாமி, அவர்களின் மாவட்டச் செயலாளர் பதவிகளை பறித்தார்.
தவெகவில் அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேர்
பேச்சுவார்த்தை பிறகு வேலுமணி தரப்பினர் எடப்பாடி அணிக்கே சென்றனர். மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய 6 எம்எல்ஏக்கள் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.
எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி
வேலுமணி, கே.சி.வீரமணி, பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதவி வேண்டாம் என போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
சி.வி.சண்முகமோ, தான் அதிமுகவில் இருக்கிறேனா இல்லையா என்பதை எடப்பாடி பழனிசாமிதான் சொல்ல வேண்டும் என்கிறார்.
32% அதிமுக நிர்வாகிகள் வெறியேற்றம்
இந்தநிலையில், அதிமுகவில் இருந்து 32 சதவீத நிர்வாகிகள் வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பதவிகளுக்கு ஆட்களை நியமிக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி திண்டாடி வருகிறார்.
இடைத்தேர்தலில் அதிமுக போட்டி?
அதேசமயம், இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட வேண்டும் என்பதில், எடப்பாடி உறுதியாக நிற்கிறார். ஆனால், அங்கு நிற்பவர்கள் மாவட்டங்களில் செல்வாக்குடன் இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என்றால், அது அதிமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்தும்.
ஒருவேளை இடைத்தேர்தலிலும் அதிமுக தோல்வியை தழுவினால், அது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பும். எனவே, மீள முடியாத சிக்கலை நோக்கி அதிமுக நகர்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
====================