Summer Rains Lash Tamil Nadu: 'Heavy Rainfall' Warning Issued for 22 Districts! source: google
தமிழ்நாடு

தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் கோடை மழை : 22 மாவட்டங்களுக்கு 'கனமழை' எச்சரிக்கை!

22 மாவட்டங்களில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

Kavitha prasanna

தமிழகத்தில் நிலவி வரும் கோடை வெயிலுக்கு இடையே, வளிமண்டல சுழற்சி காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் பரவலாகப் பெய்து வரும் கோடை மழை பொதுமக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

22 மாவட்டங்களில் கனமழை

குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, அடுத்த இரண்டு நாட்களுக்குத் தமிழகத்தின் 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, நீலகிரி, கோவை, சிவகங்கை, ராமநாதபுரம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்சி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

மழையினால் குளிர்ந்த தமிழகம்

கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில், நேற்று இரவு கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளான சிங்காநல்லூர், பீளமேடு, காந்திபுரம் மற்றும் உக்கடம் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது.

ஈரோட்டில் 105 டிகிரி பாரன்ஹீட் வரை நிலவிய கடுமையான வெப்பம், நேற்று பெய்த மழையினால் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதேபோல் நீலகிரி, கொடைக்கானல், அரியலூர், சேலம் மற்றும் திருவாரூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

சென்னை வானிலை நிலவரம்

தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை, நகரின் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் குறைவாகவே இருக்கும் என்பதால் சென்னைவாசிகளுக்கு இது சற்றே இதமான செய்தியாக அமைந்துள்ளது.

வரும் நாட்களில் இந்த மழைப்பொழிவு நீடிக்கும் என்பதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

=====