சீமான் மீது விஜயலட்சுமி புகார்
Seeman Vijayalakshmi Case Update in Tamil : தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி, குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தொடர்பாக சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் 2011ம் ஆண்டு அவர் புகார் அளி்த்திருந்தார். அதன் பேரில் சீமான் மீது காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை செப்டம்பர் 24ம் தேதி விசாரித்த நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘இருவரும் தங்களது குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற்று பரஸ்பரம் மன்னிப்புக் கோரி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக சீமானும், விஜயலட்சுமியும் ஊடகங்களிலோ அல்லது சமூக வலைதளங்களிலோ எந்தப் பேட்டியும் தரக்கூடாது. இந்த உத்தரவை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்” என்றும் எச்சரித்தனர்
மன்னிப்பு கோரினார் சீமான்
இந்த நிலையில், சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நடிகை குறித்து இனி கருத்து தெரிவிக்க மாட்டேன் என்றும், நடிகை குறித்த கருத்துகளை திரும்பப் பெறுவதாகவும் சீமான் தரப்பு கூறியது.
நடிகை தரப்பும் வாபஸ் - வழக்கு முடித்துவைப்பு
அதேபோன்று, சீமானுக்கு எதிரான புகாரை திரும்பப் பெறுவதாக நடிகை தரப்பும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. இருதரப்பும் பரஸ்பரம் மன்னிப்பு கோரியதால் இந்த வழக்கு முடித்து வைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
=============