மானியக் கோரிக்கைகள் மீது விவாதம்
தமிழக சட்டசபை இன்று காலை மீண்டும் கூடியது. மாற்றுத்திறனாளிகள், நலத்துறை வேளாண்மை, மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. துறை சார்ந்த அமைச்சர்கள் மானியக் கோரிக்கைகளை சட்டசபையில் தாக்கல் செய்தனர்.
மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு முன்பாக கேள்வி நேரத்தில் எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
பொங்கலுக்கு 8 முழம் வேட்டி
பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலைத் திட்டத்தில் 8 முழம் வேட்டிக்கு பதிலாக 4 முழம் வேட்டி வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதனால் நெசவாளர்கள் பாதிக்கப்படுவர் என எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தன.
தூய்மை பணியாளர்கள் - ஊதிய உயர்வு
தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு, மகப்பேறு விடுமுறை, சம்பளத்துடன் கூடிய 1 நாள் வார விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்.
ஊதியம் ரூ.832 உயருகிறது
அப்போது பேசிய அமைச்சர், “தூய்மை பணியாளர்களுக்கு தற்போது 762 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை 832 ரூபாயாக உயர்த்த முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்.
அதோடு தூய்மை பணியாளர்களின் வருகையை டிஜிட்டல் மயத்திலிருந்து மீண்டும் வருகைப் பதிவேடு செய்ய உள்ளோம், என்று தெரிவித்தார்.
வாரம் ஒருநாள் விடுமுறை
தூய்மைப் பணியாளர்கள் வாரந்தோறும் சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை வேண்டி தொடர்ந்து போராடி வருகின்றனர்.
அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவது எங்களுடைய கடமை. அதோடு மகப்பேறு காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்தும் முதல்வர் விஜய் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து வருகிறோம். வெகு விரைவில் நல்ல முடிவு அறிவிப்பு வெளியாகும்.
முதல்வரை சந்திக்க பணியாளர்கள் விருப்பம்
இது மட்டுமின்றி தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை நேரில் சந்திக்க வேண்டும் எனவும் தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்களின் இந்த ஆசையும் விரைவில் நிறைவேற்றப்படும்” என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு
இதேபோன்று, டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்களில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் விக்னேஷ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
பண்டிகை முன்பணம் ரூ.20,000
அதன்படி, மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு பண்டிகை முன்பணமாக ரூ.20,000 வழங்கப்படும் என்றும், ஆண்டுதோறும் சீருடைகளுக்காக ரூ.6,000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுவாழ்வு நிதி உயர்வு
கள்ளச்சாராயம் காய்ச்சி அல்லது விற்பனை செய்து சிறை சென்று, பின்னர் விடுதலையாகி மனம் திருந்தியவர்களுக்கு வழங்கப்படும் மறுவாழ்வு நிதி 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது எனவும் அமைச்சர் அறிவித்தார்.
=====================