2026 சட்டமன்ற தேர்தல்: தேர்தல் களம்
TVK Velmurugan Not Contest in TN Elections 2026 : தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக திமுக கூட்டணியில் 2 தொகுதிகள், தனி சின்னம் வலியுறுத்திய நிலையில் திமுக உடன்படாத நிலையில் கூட்டணியில் இருந்து விலகுவதாகவும், தேசிய ஜனநாயக் கூட்டணியில் சேர மாட்டேன் என்றும் வேல்முருகன் தெரிவித்திருந்தார்.
மூத்த நிர்வாகிகளுக்கு முன்னுரிமை
இந்நிலையில் கட்சிக்கு உழைத்த மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் மூத்த தலைவர்களுக்காக மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் திமுக கூட்டணியிலிருந்து விலகியதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார்.
திமுக கூட்டணியில் இருந்து விலகியதற்கான காரணம்
ஐந்து ஆண்டு காலம் திமுக கூட்டணியில் பயணித்த போதும், தமிழ் சமூகத்தின் வாழ்வுரிமைப் பிரச்சனைகளுக்காகச் சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் சமரசமின்றிப் போராடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முக்கியப் போராட்டங்கள்
பரந்தூர் விமான நிலைய விவகாரம், நெய்வேலி நிலக்கரிப் பிரச்சனை, ஹைட்ரோ கார்பன், ஓஎன்ஜிசி எதிர்ப்புப் போராட்டங்கள், பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான குரல் என மக்களின் அனைத்துப் பிரச்சனைகளிலும் தொடர்ந்து களத்தில் நின்றதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஈழத் தமிழர் விடுதலை, கனிமக் கொள்ளை எதிர்ப்பு, மணல் குவாரி எதிர்ப்பு மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்களின் கோரிக்கைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததை குறிப்பிட்டுப் பேசினார்.
தேர்தல் நேரத்தில் மட்டுமே தேடி வருகிறார்கள்
கூட்டணியில் நீடித்த போது அரசு உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சருடன் பல்வேறு கொள்கை ரீதியான மோதல்கள் ஏற்பட்டதாக வேல்முருகன் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
குறிப்பாக, தான் முன்வைத்த 10 அம்சக் கோரிக்கைகள் மற்றும் மக்கள் பிரச்சனைகள் குறித்து வெளியிட்ட அறிக்கைகளை ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை என்றும், தேர்தல் நேரத்தில் மட்டுமே ஊடகங்கள் தன்னைத் தேடி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக மீதான அதிருப்தி
கடலூர் மாவட்ட திமுக கூட்டங்களில் அமைச்சர்கள் முன்னிலையிலேயே தன்னை விமர்சித்துப் பேசிய நிர்வாகிகளைக் தலைமை கண்டிக்கவில்லை என்பது வேல்முருகனின் முக்கிய வருத்தமாக உள்ளது.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை
வரும் சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்ற அதிரடி முடிவை வேல்முருகன் அறிவித்துள்ளார்.
கட்சி நிர்வாகிகளுக்கு முன்னுரிமை
பண்ருட்டி தொகுதியோ அல்லது வேறு தொகுதியோ எதுவாக இருந்தாலும் கட்சி நிர்வாகிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், தான் தமிழகம் முழுவதும் பயணித்து கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
கொள்கை ரீதியான முடிவு
கூடுதல் சீட் கிடைக்காததால் திமுகவில் இருந்து வெளியேறினார் என்ற விமர்சனங்களை மறுத்த வேல்முருகன் இது நீண்ட காலத்திற்கு முன்பே எடுக்கப்பட்ட கொள்கை ரீதியான முடிவு என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
====