வலுப்பெறும் பருவமழை
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக வலுப்பெற்று வருகிறது. நேற்றைய தினம் நீலகிரி, கோவை, கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், தருமபுரி, திருப்பத்தூர், தஞ்சை, நெல்லை கன்னியாகுமரி, உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது.
அதிகபட்சமாக நீலகிரி பகுதியில் 78 மி.மீ மழையும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழையும் பெய்தது.
இந்நிலையில், தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கான வானிலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.
தமிழக வானிலை அப்டேட்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, "சுமார் 5.8 மற்றும் 7.6 கிமீ உயரத்தில் வடக்கு கடலோர தமிழகம் வழியாக ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
அத்துடன் வட தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் மழை
இதன் காரணமாக இன்றைய தினம் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இன்று வட மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதான மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளையும் மழை தொடரும்
நாளை ஆகஸ்ட் 9 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு, இதர தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
14ம் தேதி வரை மழை நீடிக்கும்
ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை
வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் அதேவேளை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை இன்றைய தினம் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில இடங்களில் மாலை, இரவு வேளைகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இன்று மற்றும் நாளைய தினம் குமரிக் கடலின் சில பகுதிகள் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
எனவே, மீனவர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
=======================