BJP National Leader Nitin Nabin's bold clarification regarding Annamalai's resignation! source:google
தமிழ்நாடு

"கட்சியே பிரதானம், தனிநபர்கள் அல்ல!" : அண்ணாமலையின் விலகல் குறித்து பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் விளக்கம்!

அண்ணாமலை பாஜக விலகல், நிதின் நபின் பேட்டி, வி தி லீடர்ஸ் இயக்கம், பாஜாக தேசிய தலைமை, தமிழ்நாடு அரசியல் செய்திகள், அமர் பிரசாத் ரெட்டி

Kavitha prasanna

பாஜக தேசியத் தலைவர் செய்தியாளர் சந்திப்பு

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவருமான அண்ணாமலை அண்மையில் கட்சியில் பாஜகவில் இருந்து விலகி இது நம்ம இயக்கம் என்ற இயக்கத்தை தொடங்கினார்.

இந்நிலையில், பாஜகவில் இருந்து அண்ணாமலையின் விலகல் மற்றும் புதிய அரசியல் இயக்கம் குறித்து பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து முதன்முறையாக தனது அதிகாரப்பூர்வ கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

'வி தி லீடர்ஸ்' இயக்கமும் புதிய நகர்வுகளும்

பாஜகவில் இருந்து வெளியேறிய அண்ணாமலை, அண்மையில் "இது நம்ம இயக்கம்" (We The Leaders) என்ற பெயரிலான புதிய இயக்கம் ஒன்றை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார்.

இந்த புதிய அமைப்பில், பாஜகவைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகிகள் பலரும் அண்ணாமலையுடன் கைகோர்த்துள்ளனர். குறிப்பாக, அக்கட்சியின் முக்கிய நிர்வாகியாக செயல்பட்ட அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் இந்த புதிய இயக்கத்தில் இணைந்துள்ளனர்.

பாஜக தேசிய தலைமை விளக்கம்

டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், அண்ணாமலையின் இந்த புதிய முயற்சி மற்றும் கட்சி நிர்வாகிகள் சிலரின் விலகல் குறித்துப் பேசிய நிதின் நபின், "அண்ணாமலை போன்ற பல இளைஞர்கள் தேசப் பணியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக எங்களது கட்சி எப்போதும் அவர்களை ஊக்குவித்து, தேவையான அனைத்து வழிகளிலும் ஆதரவாகவே இருந்து வந்தது.

எங்களோடு அவர் பயணித்த காலம் வரை அவருடைய தனிப்பட்ட கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் கட்சித் தலைமை உரிய முக்கியத்துவத்தையும், மரியாதையையும் கொடுத்துவந்தது உண்மை" என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், தனிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதே உண்மையான மக்கள் சேவை என்று சுட்டிக்காட்டினார். மேலும், "தற்போது அண்ணாமலை பாஜகவில் இல்லை. சில தனிப்பட்ட காரணங்களைக் கூறி அவராகவே கட்சியை விட்டு விலகியுள்ளார்.

அவர் பாஜகவின் உறுப்பினராக இல்லாத பட்சத்தில், அவருடைய தனிப்பட்ட கருத்துகளையோ அல்லது புதிய இயக்கத்தின் செயல்பாடுகளையோ பாஜக ஆதரிக்கப் போவதில்லை" என்றும் தெளிவுபடுத்தினார்.

"கொள்கைகளே பெரியவை"

மேலும் பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை எப்போதுமே தனிநபர்களை விட கட்சியே பிரதானமானது என்று நிதின் நபின் தெரிவித்தார்.

"கட்சியின் சித்தாந்தங்களும், அதன் கொள்கைகளுமே தனிமனிதர்களை விடப் பெரியவை. தனிநபர்களின் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு, கட்சியின் நலனுக்காக செயல்படுபவரே சிறந்த தலைவராக இருக்க முடியும்.

எனவே, கட்சியை விட்டு விலகிச் சென்ற ஒருவரைப் பற்றி இனிமேல் பேசுவதற்கு எங்களிடம் எதுவுமில்லை" என்று கூறினார்.

======