Thirumavalavan said that he has requested that seats be allocated according to strength in DMK alliance google
தமிழ்நாடு

தொகுதி பங்கீடு : ”பேரம் பேசவில்லை, வலிமைக்கு ஏற்ப அதிகாரப் பகிர்வு” : விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன்…!

திமுக கூட்டணியில் வலிமைக்கு ஏற்ப தொகுதி ஒதுக்குமாறு கேட்டு இருப்பதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Kannan

தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் பரபரப்படைந்துள்ளன. தமிழகத்தில் நான்கு முனைப் போட்டிக்கான வாய்ப்பு இருக்கும் நிலையில், கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் ஒரு பக்கம் நடந்தவாறே இருக்கிறது.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

அந்த வகையில், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது. 19 கட்சிகள் வரை கூட்டணியில் இருப்பதால், யாருக்கு எவ்வளவு தொகுதிகளை கொடுப்பது, திமுக போட்டியிட வேண்டிய தொகுதிகள் எவ்வளவு என்ற குழப்பம் நீடிக்கிறது.

காங்கிரஸ் உள்ளே? வெளியே?

கூடுதல் இடங்கள் கேட்டு குடைச்சல் கொடுக்கும் காங்கிரஸ், கூட்டணியில் இருக்குமா? அல்லது வெளியேறுமா? என்பது நாளை தெரியவரும். தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும் காங்கிரஸ், கூட்டணியை விட்டு வெளியேறினாலும் பரவாயில்லை என்ற மனநிலையில், திமுக உள்ளது.

திமுகவுடன் விசிக பேச்சுவார்த்தை

இந்தநிலையில், திமுக கூட்டணியில் தொடர்ந்து இடம்பெற்று இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடத்தியது.

அண்ணா அறிவாலயத்தில் திமுக குழுவினரை, அக்கட்சியின் தலைவர் திருமாவளவனும், எம்பி ரவிக்குமாரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

வலிமைக்கு ஏற்ப தொகுதிகள்

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன், “ திமுகவிடம் எங்கள் வலிமைக்கு ஏற்ப தொகுதி பங்கீடு பற்றி கேட்டுள்ளோம். பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது.

2026 தேர்தல் - முக்கியத்துவம் வாய்ந்தது

2026 தேர்தலானது வழக்கமான பொதுதேர்தல் அல்ல. வலது சாரி சக்திகளை காலுன்ற விடக்கூடாது. மதசார்பற்ற ஜனநாயக சக்திகளுக்கு இடம் அளிக்க வேண்டும். மதவாத அரசியலுக்கு தமிழகத்தில் இடம் இல்லை.

திமுகவுடன் பேரம் பேசு நிலையில் இல்லை. எங்களுக்கான அதிகார பகிர்வு குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். முதலமைச்சருடன் பேசி பிறகு மீண்டும் அழைப்பதாக கூறியுள்ளனர்.

பாண்டிச்சேரியிலும் போட்டி

அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் ஒரு தனி தொகுதி, இரண்டு பொது தொகுதிகள் என 3 தொகுதிகள் கேட்டு உள்ளோம். அதிகார பகிர்வு என்பது தொகுதி தான்.

திமுக கூட்டணியில் காங். இருக்கும்

தேசிய அளவில் பெரிய சக்தி என்பதால் காங்கிரஸ் கட்சியினர் ஒரு நிலைப்பாட்டை அறிவிக்கிறார்கள் அதில் நான் கருத்து சொல்ல முடியாது. எப்படி ஆனாலும் காங்கிரஸ் திமுக கூட்டணியில் தான் இருக்கும்.

தொகுதிகள் பற்றி பேசவில்லை

திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதே எங்களின் இலக்கு. பேச்சுவார்த்தை சுமூகமாக, ஆக்கப்பூர்வமாக நடைபெற்று இருக்கிறது. தொகுதிகள் பற்றி பேசவில்லை.

ராஜ்யசபா சீட் கேட்கவில்லை

விடுதலை சிறுத்தைகளுக்காக ராஜ்யசபா சீட் எதுவும் கேட்கவில்லை. தொகுதி பங்கீட்டில் அதிகார பகிர்வு என்பது, ஆட்சியில் பங்கு கிடையாது. எத்தனை தொகுதிகள் என்பதை தான் விடுதலை சிறுத்தைகள் அவ்வாறு குறிப்பிடுகின்றன” இவ்வாறு திருமாவளவன் பேட்டியளித்தார்.