செந்தூரில் மகா கும்பாபிஷேகம் :
குன்றுதோறாடும் முருகப்பெருமானுக்கு, கடரோலத்தில் அமைந்துள்ள கோயில்தான் திருச்செந்தூர். முருகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் மஹாகும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
16 ஆண்டுகளுக்கு சுமார் 300 கோடி ரூபாய் செலவில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பக்தர்களுக்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டன. கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. ஜூலை 1ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கின.
யாகசாலை பூஜைகள் :
ராஜகோபுரத்தின் கீழ் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட யாகசாலையில் 71 ஹோமகுண்டங்கள் அமைத்து 700 கும்பங்கள் வைக்கப்பட்டு, 96 மூலிகைகள் இடப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.
திருக்கல்யாண மண்டபத்தில் முருகப் பெருமானுக்கு தனியாக 5 ஹோம குண்டங்கள் வைத்து, யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று அதிகாலை 4 மணிக்கு 12ம் கால யாகசாலை பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றன. பின்னர், யாகசாலையில் இருந்து கும்பங்கள் கோயில் கோபுர விமான கலசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
ராஜகோபுரங்களுக்கு வழிபாடு :
இன்று காலை 6 30 மணியளவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ராஜகோபுரத்தின் கலசங்களுக்கு ஆராதனை நடந்த பின் அவற்றின் மீது புனித நீர் ஊற்றப்பட்டது
சண்முகர், ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை, குமரவிடங்கபெருமாள், நடராஜர் மற்றும் உள்வெளி பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
லட்சக் கணக்கான பக்தர்கள் :
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் குவிந்தனர்.கும்பாபிஷேகத்தை காண பக்தர்கள் கடற்கரை வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்வை கண்டு களிக்க நகரம் முழுவதும் 70 பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு இருந்தன. கும்பாபிஷேகம் முடிந்ததும் பக்தர்கள் மீது 20 ட்ரோன்களை கொண்டு புனித நீர் தெளிக்கப்பட்டது. அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா :
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷம் விண்ணை பிளந்தது. பக்தர்கள் வசதிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. தண்ணீர், உணவு தடையின்றி வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஆயிரக் கணக்கான போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். பக்தர்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சுமார் 10 லட்சம் பேர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இன்னும் சில வாரங்களுக்கு நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை வழிபட உள்ளனர்.
=======