தென் மாவட்ட மக்களின் பயன்பாட்டில் பங்கு வகிக்கும் ரயில்
Tirunelveli-Dadar Central SF Express Six Additional Coaches : தென்மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் மும்பையில் வசித்து வருகின்றனர்.
குறிப்பாக நாகர்கோவில் மற்றும் நெல்லையிலிருந்து மும்பைக்கு தினசரி மற்றும் வாராந்திர ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை இவ்விரு பகுதிகளிலிருந்தும் புறப்படும் ரயில்கள் மும்பையின் மையப்பகுதிகளில் உள்ள தாதர் ரயில் நிலையம் மற்றும் சத்திரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (CST/CSMT) ஆகிய நிலையங்களை சென்றடைகிறது.
நீண்டதூர ரயில்=லோக்மான்ய திலக் டெர்மினஸ் (LTT)
மும்பை மாநகர பகுதியில் அதிகரித்து வரும் ரயில் நெரிசலை குறைக்கும் நோக்கில் மத்திய ரயில்வே நிர்வாகம் சில நீண்டதூர ரயில்களை புறநகர் நிலையமான லோக்மான்ய திலக் டெர்மினஸ் (LTT) நோக்கி மாற்ற முடிவு செய்துள்ள நிலையில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாகர்கோவில்–மும்பை சேவைகள் LTT-க்கு மாற்றம்
16352 எண் நாகர்கோவில்–மும்பை எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 16ஆம் தேதி முதல் மற்றும் 16351 எண் மும்பை–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் லோக்மான்ய திலக் டெர்மினஸை மையமாக கொண்டு இயங்கும். இதன் மூலம் நாகர்கோவில்–மும்பை சேவைகள் முழுமையாக LTT-க்கு மாற்றப்படுகின்றன.
வாராந்திர ரயிலும் மாற்றம்
நெல்லையிலிருந்து புதன்கிழமை தோறும் இயக்கப்படும் தாதர் வாராந்திர ரயிலும் ஏப்ரல் மாதம் முதல் லோக்மான்ய திலக் டெர்மினஸுக்கு மாற்றப்படுகிறது.
இது மும்பை நகர மையப் பகுதிகளில் உள்ள ரயில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும் கருதப்படுகிறது.
கூடுதலாக ஆறு பெட்டிகள் இணைப்பு
இந்த மாற்றங்கள் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில் நெல்லை–மும்பை (LTT) வாராந்திர சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (22629/22630) ரயில்களில் நிரந்தரமாக 6 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.
இதன் மூலம் மொத்த பெட்டிகளின் எண்ணிக்கை 16 இலிருந்து 22 ஆக உயர்கிறது. புதியதாக 1 இரண்டாம் வகுப்பு ஏசி, 4 மூன்றாம் வகுப்பு ஏசி மற்றும் 1 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி சேர்க்கப்பட உள்ளது.
ஏப்ரல் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
இந்த ரயில் மாற்றங்கள் 22630 எண் நெல்லை–மும்பை எக்ஸ்பிரசில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மற்றும் 22629 எண் மும்பை–நெல்லை எக்ஸ்பிரசில் ஏப்ரல் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
இதே தேதிகளில் இவ்விரு ரயில்களும் தாதருக்கு பதிலாக லோக்மான்ய திலக் டெர்மினஸில் இருந்து இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.