தமிழக சட்டமன்ற தேர்தல்
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டமன்றத்திற்கு ஒரே கட்டமாக வரும் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30ம் தேதி தொடங்கியது. முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், சீமான் உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்தனர்.
மனுத்தாக்கல் நாளை கடைசிநாள்
பல்வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிடுவோரும் மற்றும் சுயேட்சைகளும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து விட்டார்கள். மனுக்களை தாக்கல் செய்ய நாளை ( ஏப்ரல் 6 ) கடைசி நாளாகும்.
தலைவர்கள் மனுத்தாக்கல்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை, வானதி சீனிவாசன், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் நாளை மனுத்தாக்கல் செய்கின்றனர்.
7ம் தேதி மனுக்கள் பரிசீலனை
நாளை பிற்பகல் மூன்று மணியோடு மனுத்தாக்கல் நிறைவு பெறுகிறது. தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீது 7ம் தேதி ( செவ்வாய்க்கிழமை ) பரிசீலனை நடைபெறும். தகுதியான மனுக்கள் ஏற்கப்படும். தகுதியற்ற மனுக்கள் நிராகரிக்கப்படும்.
இறுதி வேட்பாளர்கள் பட்டியல்
வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் வரும் 9ம் தேதி ஆகும். அதன்பின்னர், இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும். முதன்முறையாக களமிறங்கும் தவெக மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள்
* முதல்வர்.ஸ்டாலின் - கொளத்தூர்
* உதயநிதி ஸ்டாலின் - சேப்பாக்கம்
* எடப்பாடி பழனிசாமி - எடப்பாடி
* சீமான் - காரைக்குடி
* விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு
* நயினார் நாகேந்திரன் - சாத்தூர்
* எல். முருகன் அவிநாசி
* தமிழிசை சௌந்தரராஜன் - மயிலாப்பூர்
* பிரேமலதா விஜயகாந்த் - விருத்தாச்சலம்
அனல் பறக்கும் பரப்புரை
தேர்தலுக்கு குறைவான நாட்களே இருப்பதால் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சீமான் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர். தவெக தலைவர் விஜயும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
நான்கு முனைப்போட்டி, ஜென்ஸீ வாக்காளர்களின் வாக்குகளை பெறுவதை பொருத்தே தேர்தல் வெற்றி தோல்வி இருக்கும் எனக் கூறப்படுகிறது.
=====================================