TVK Government First Assembly Session Tamil | Governor R V Arlekar Speech source:google
தமிழ்நாடு

74 ஆண்டுகால தமிழக வரலாற்றில் புதிய புரட்சி “கூட்டணி ஆட்சி” : தவெக அரசுக்கு ஆளுநர் பாராட்டு!

2 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்து முதல்வர் விஜய் புதிய சாதனை படைத்துள்ளதாக ஆளுநர் பாராட்டு.

Kavitha prasanna

TVK Government First Assembly Session Tamil | Governor R V Arlekar Speech

தவெக அரசின் முதல் கூட்டத்தொடர்

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்து அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் தற்போது தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

தவெக மாபெரும் புதிய புரட்சி

இப்பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகர் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மாபெரும் புதிய புரட்சி ஏற்பட்டுள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் உரை

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசின் முதலாவது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று முறைப்படி தொடங்கியது.

புதிய ஆட்சியில் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் என்பதால், மரபுப்படி மாநில ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் கலந்து கொண்டு தனது தொடக்க உரையை ஆற்றினார்.

தலைவர்கள் பெயரைக் குறிப்பிட்டு பேசிய ஆளுநர்

ஆளுநர் தனது உரையின் போது, தமிழகத்தின் மிக முக்கியத் தலைவர்களான பெரியார், அம்பேத்கர், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரின் பெயர்களை சுட்டிக்காட்டிப் பேசினார்.

உரையின் இடையே, தலைவர்களின் பெயர்களைத் தவறாக உச்சரித்திருந்தால் அதற்காக தன்னை மன்னிக்கவும் என்றும் அவர் அவையில் குறிப்பிட்டார்.

2 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்த தவெக

தொடர்ந்து பேசிய அவர், "பல்வேறு தடைகளையும் சவால்களையும் கடந்து, கட்சி தொடங்கிய வெறும் 2 ஆண்டுகளிலேயே ஆட்சிக்கட்டிலைப் பிடித்து தவெக சாதனை படைத்துள்ளது.

தவெக அரசு மீது முழு நம்பிக்கை உள்ளது

இது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய புரட்சியாகும். ஜனநாயக முறையில் மக்கள் ஆதரவோடு முதல்வர் விஜய் இந்த மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார். தவெக கொள்கைத் தலைவர்களின் வழியிலேயே இந்த அரசு சிறப்பாகச் செயல்படும் என்ற முழு நம்பிக்கை உள்ளது" என்று பாராட்டினார்.

மேலும், 74 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில், கூட்டணி ஆட்சி மூலமாக ஒரு புதிய சாதனை படைக்கப்பட்டு, முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ளார் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

பிரதமருடனான சந்திப்பு மற்றும் தமிழக திட்டங்கள்

முன்னதாக, தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்வர் விஜய் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான நிதி மற்றும் பல்வேறு முக்கியத் திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை அவர் பிரதமரிடம் முன்வைத்தார்.

அதேபோல், சமீபத்தில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்திலும் தமிழகத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தி முதல்வர் விஜய் பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களான ஓசூர், கோவை மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாடுகள் அதில் அடங்கும்.

மத்திய அரசிடம் தமிழகத்தின் உரிமைகளையும், தேவையான கோரிக்கைகளையும் இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் என்றும் ஆளுநர் தனது உரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

======