கரூர் கூட்ட நெரிசல்
Karur stampede case: TVK leader Vijay to face second round of CBI questioning in Delhi : கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
கரூர் வழக்கு - சிபிஐ விசாரணை
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. நவம்பர் 25ம் தேதி தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர்.
இவர்களுடன், தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் கே.பி. மதியழகன், எம்.சி. பவுன்ராஜ் ஆகியோரும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர். சிபிஐ அதிகாரிகளின் பல்வேறு கேள்விகளுக்கு இவர்கள் பதில் அளித்தனர்.
அதிகாரிகளும் விசாரணைக்கு ஆஜர்
டிசம்பர் 4ம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலும் சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜராகி அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரிடம் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
விஜய்க்கு சம்மன் - நேரில் ஆஜர்
இதனிடையே, இந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ஏற்ற தவெக தலைவர் விஜய் கடந்த 12ம் தேதி சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். சிபிஐ அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு விஜய் பதிலளித்தார். 2வது நாளாக விசாரணை இல்லாததால், சென்னை திரும்பினார் விஜய்.
மீண்டும் ஆஜரானார் விஜய்
இந்தநிலையில், 2வது முறையாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக தவெக தலைவர் விஜய் நேற்று மாலை 4 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று காலை அவர் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
சிபிஐ அதிகாரிகள் கேள்வி
அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி, சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் வழக்கில் விசாரணை சூடுபிடித்து இருப்பதால், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
=================
.