TVK Vijay alleges that the Tamil Nadu government has not taken any proper action in the arrest of fishermen source:google
தமிழ்நாடு

மீனவர்கள் கைது,உருப்படியான நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு: விஜய்

TVK Vijay on Fisherman Arrest : மீனவர்கள் கைது நடவடிக்கையில் தமிழக அரசு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தவெக விஜய் குற்றச்சாட்டு

S Kavitha

TVK VIJAY ON TAMILNADU FISHERMEN ARREST :

கடந்த 14 ஆம் தேதி கிளிஞ்சல்மேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 25 பேர் இரண்டு படகுகளில் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

இலங்கை கடற்படை அட்டூழியம்

இந்நிலையில், நேற்று நள்ளிரவு கோடியக்கரைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கைக் கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 25 மீனவர்களையும் கைது செய்து , அவர்களது படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மீனவர்களுக்காக குரல் கொடுத்த விஜய்

இந்நிலையில், காரைக்காலைச் சேர்ந்த இருபத்தைந்து மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களை உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தமிழக அரசு மீனவர்களின் பிரச்னையில் எந்த உருப்படியான நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டம், காசாக்குடிமேடு, கிளிஞ்சல்மேடு கிராமங்களைச் சேர்ந்த 25 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

படகுகளை மீட்டுத்தர வேண்டும்

இந்த அடாத செயல், அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 25 பேரையும் உடனடியாக விடுவித்து, அவர்களது படகுகளையும் மீட்டுத் தர ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவர்கள் பரிதவிப்பு

அதே நேரத்தில், இலங்கை நீதிமன்றத்தால் கடந்த 3ஆம் தேதி விடுவிக்கப்பட்ட பிறகும் தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேர், சொந்த ஊருக்குத் திரும்ப முடியவில்லை. அவர்கள் அங்கே பரிதவித்து வருவதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளது வேதனை அளிக்கிறது.

சிறையில் வாடும் மீனவர்கள்

மேலும் தமிழக மீனவர்கள் 3 பேர், இலங்கை நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையைச் செலுத்த முடியாமல் சிறையில் வாடுகின்றனர்.

தமிழக அரசு மீது குற்றச்சாட்டி

மீனவர்களுக்குத் தொடர்ந்து இதுபோல நிகழ்வதைத் தடுக்க, தமிழக அரசு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாம் கடிதம் எழுதுவதே போதும் என்று தமிழக முதல்வர் எண்ணுகிறாரா? இது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.

மனிதாபிமான முறையில்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் அனைவரையும் உரிய முறையில் மீட்டு, சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும்.

மனிதாபிமான முறையில் இலங்கை அரசிடம் பேசி, தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், ஒன்றிய அரசை உண்மையாகவே உணர்வுப்பூர்வமாக வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலை தளத்தில் பதிவிட்டு வலியுறுத்தியுள்ளார்.