இந்தியாவே உற்று நோக்கும் தமிழக முடிவுகள்
தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் திங்கட்கிழமை ( மே 4ம் தேதி ) எண்ணப்படுகின்றன. தமிழக தேர்தல் வரலாற்றில் இல்லாத அளவு 85.15 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதை வியப்பை அளித்துள்ளது. குறிப்பாக தவெக தலைவர் விஜய் கட்சிக்கு அதிக வாக்குகள் பதிவானதாக கூறப்படுகிறது. இது திமுக, அதிமுகவை எப்படி பாதிக்க செய்யப் போகிறது என்பது மே 4ம் தேதி தெரிந்து விடும்.
திருச்செந்தூரில் விஜய்
இந்தநிலையில், தவெக தலைவர் விஜய், இன்று அதிகாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தினார். அவர் சத்ரு சம்ஹார பூஜை செய்தது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர்
தமிழகத்தின் புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக விளங்குகிறது.
கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள தனித்துவமான தெய்வீக இடமாக கருதப்படுகிறது. பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் அதிகமாக வருகை தரும் முக்கிய தலமாக உள்ளது.
சத்ரு சம்ஹார மூர்த்தி வழிபாடு
இந்தநிலையில், இன்று அதிகாலை விஜய் கோவிலுக்கு வருகை தந்தார். தகவல் அறிந்த பக்தர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் அவரைக் காண குவிந்தனர்.
கோவிலுக்குள் நுழைந்த அவர், மிகவும் சிறப்பு பெற்ற சத்ரு சம்ஹார மூர்த்தியை தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து சத்ரு சம்ஹார பூஜையில் கலந்து கொண்டு வேண்டுதலை நிறைவேற்றினார்.
சத்ரு சம்ஹார பூஜை என்றால் என்ன?
சத்ரு சம்ஹார பூஜை என்பது எதிரிகளை வெல்லவும், தீய சக்திகளை அகற்றவும் செய்யப்படும் ஒரு சக்திவாய்ந்த வழிபாடாக கருதப்படுகிறது. குறிப்பாக அரசியல் மற்றும் தொழில் துறைகளில் உள்ளவர்கள் இந்த பூஜையை அதிகமாக செய்து வருகின்றனர்.
இந்த யாகத்தை நடத்தினால் எதிரிகள் வீழ்வர் என்ற நம்பிக்கை பலரிடமும் நிலவுகிறது. அதனால் அரசியல்வாதிகள் பலர் இந்த கோயிலுக்கு வந்து இத்தகைய பூஜைகளை நடத்துவது வழக்கமாக உள்ளது.
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
அந்த வரிசையில், தற்போது விஜய் முதன்முறையாக இந்த சத்ரு சம்ஹார பூஜையை நடத்தி இருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியமான விவாதமாக மாறியுள்ளது. பூஜை முடிந்த பின், அவர் மூலவர் சன்னதிக்கு முன்பு தரையில் அமர்ந்து மனமுருக பிரார்த்தனையில் ஈடுபட்டார். இது அவரது ஆன்மிக ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது.
அதனைத் தொடர்ந்து, சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளிலும் அவர் தரிசனம் செய்தார். மேலும் தட்சிணாமூர்த்தி, பெருமாள், சூரசம்கார மூர்த்தி ஆகிய தெய்வங்களையும் வழிபட்டார்.
சத்ரு சம்ஹார பூஜையின் சிறப்பு, எதிரிகள், வழக்குத் தொல்லைகள், நோய்கள் போன்றவற்றிலிருந்து விடுபடச் செய்வதாக நம்பப்படுகிறது. இது மன உறுதியையும் தைரியத்தையும் அதிகரிக்க உதவும் என பக்தர்கள் கருதுகின்றனர்.
==================