சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் போலீசார் தாக்கியதில், கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்ததற்கு நீதி கேட்டும், நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் போலீஸ் விசாரணையில், 24 பேர் உயிரிழந்தது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும், தமிழக வெற்றிக் கழகம், சார்பில், சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
த.வெ.க., தலைவரும் நடிகருமான விஜய் கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். ''சாரி வேண்டாம்; நீதி வேண்டும்'' என குறிப்பிடப்பட்டு இருந்த பதாகைகளை விஜய் உட்பட த.வெ.க.,வினர் கையில் வைத்து இருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும், ''சாரி வேண்டாம்; நீதி வேண்டும்'' என, திமுக அரசுக்கு எதிராக கோஷ்ங்களை எழுப்பினர். முதல்முறையாக போராட்ட களத்தில் விஜய் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. .
ஆர்ப்பாட்டத்தில் விஜய் பேசியது:
திருப்புவனம் மடப்புரம் அஜித் குமார் சாதாரண, எளிய குடும்பத்தை சேர்ந்த இளைஞர். அந்த சாதாரண குடும்பத்திற்கு நடந்த கொடுமைக்கு தமிழக முதல்வர் சாரி சொன்னார்கள். அது தப்பில்லை.
அதோடு உங்களுடைய ஆட்சி காலத்தில், இதே மாதிரி போலீஸ் விசாரணையில் 24 பேர் இறந்து போய் இருக்கிறார்கள். அந்த 24 பேர் குடும்பத்திற்கும் நீங்கள் சாரி சொன்னீர்களா?
தயவு செய்து சாரி சொல்லிருங்க. அஜித்குமார் குடும்பத்திற்கு நீங்க கொடுத்த நிவாரணம் மாதிரி, இந்த 24 பேர் குடும்பத்திற்கும் நீங்க நிவாரணம் கொடுப்பீங்களா? தயவு செய்து அந்த நிவாரணத்தையும் கொடுத்துடுங்க,
சாத்தான் குளம் ஜெபராஜ் வழக்கை சிபிஐக்கு மாற்றிய போது, தமிழக போலீசாருக்கு அவமானம் என்று சொன்னீர்கள், இன்றைக்கு நீங்க உத்தரவிட்டதற்கு, பெயர் என்னங்க சார். அதே தானே, அன்றைக்கு நீங்கள் சொன்னதும், இன்றைக்கு நடப்பதும்,
நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில், ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. அதற்கு பயந்துதான் மத்திய அரசு பின்னால் ஒளிந்து கொள்கிறீர்களா?
உங்கள் ஆட்சியில் தான் எத்தனை கொடுமைகள்? அண்ணா பல்கலை வழக்கில இருந்து, அஜித்குமார் மரண வழக்கு வரை, நீதிமன்றம் தலையிட்டுதான் அரசை கேள்வி கேட்கிறது. எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் என்றால், நீங்கள் எதற்கு சார்? உங்கள் ஆட்சி எதற்கு சார்? நீங்கள் அமர்ந்து இருக்கும் சிஎம் பதவி எதற்கு? எப்படி கேள்வி கேட்டாலும் உங்களிடம் பதில் இருந்தால் தானே விடை கிடைக்கும்.
உங்களிடம் இருந்து வரப்போகும் பதில் சாரிம்மா மட்டும்தான். தெரியாம நடந்துருச்சி, நடக்கக் கூடாதது நடந்துருச்சி அவ்வளவுதானே?
விளம்பர மாடல் திமுக அரசு, இப்போ சாரிம்மா மாடல் சர்க்காராக மாறிருச்சி. ஆட்சியை விட்டுப் போவதற்குள் பரிகாரமாக சட்டம் ஒழுங்கை சரி செய்யுங்க.
இல்லை என்றால் மக்களோடு மக்களாக ஒன்றாக நின்று, உங்களை சரி செய்ய வைப்போம். த.வெ.க., சார்பில் அதற்கான அத்தனை போராட்டங்களும் எடுத்து நடத்தப்படும். இவ்வாறு விஜய் ஆவேசத்துடன் திமுக அரசை கண்டித்து பேசினார்
====