Union Minister L. Murugan criticized Chief Minister Stalin, who do not have time to listen the demands of sanitation workers are watching movies 
தமிழ்நாடு

கோரிக்கையை கேட்காமல், சினிமா பார்க்கிறார் : எல். முருகன் காட்டம்

தூய்மை பணியாளர்கள் கோரிக்கையை கேட்க நேரமில்லாதவர்கள், சினிமா பார்க்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலினை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

Kannan

தூய்மை பணியாளர்கள் போராட்டம் :

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் 13 நாட்களாக தொடர் போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அவர்களை நேற்று நள்ளிரவு வலுக்கட்டாயமாக தமிழக அரசு அப்புறப்படுத்தியது. அவர்களின் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்ற சென்னை மாநகராட்சியும், அரசும் தயாராக இல்லை.

“இல்லம் தோறும் மூவர்ணக் கொடி” :

79வது சுதந்திர தினவிழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பாஜக சார்பில் “இல்லம் தோறும் மூவர்ணக் கொடி” என்ற பெயரில் தேசபக்தி விழிப்புணர்வு யாத்திரை நடைபெற்றது. சென்னையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா :

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எல்.முருகன், “பொருளாதாரத்தில் மிகப்பெரிய நாடாக நாம் வளர்ச்சி அடைந்து வருவதாகவும், பிரிட்டனை பின்னுக்கு தள்ளி விட்டு நான்காவது பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா இருப்பதாக சுட்டிக் காட்டினார்.

உலகிற்கு வழிகாட்டி இந்தியா :

2027-இல் மூன்றாவது மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த நாடாகவும், 2047ல் நூறாவது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது உலகத்திற்கு வழிகாட்டியாக இருக்கும் என்பதற்காக மக்கள் அனைவரும் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதை வலியுறுத்தி மூவர்ண தேசியக்கொடி பேரணி நடத்துகிறோம்.

சமூக நீதி பேச அருகதை கிடையாது :

திமுக அரசுக்கு சமூக நீதி பேசுவதற்கு துளியும் அருகதை கிடையாது. ஜனநாயக முறையில் தனது கோரிக்கையை வைத்து தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களது கோரிக்கையை கேட்பதற்கு திமுக அரசுக்கு நேரமில்லை.

சினிமா பார்க்க நேரம் இருக்கிறதா? :

இரண்டு நிமிடங்கள் கூட பேசாமல் சினிமா படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கொடுங்கோலாட்சி நடந்து கொண்டிருக்கிறது.

ராகுல் காந்தி வாக்குகள் திருடப்பட்டதாக பொய்யாக குற்றம் சாட்டி வருகிறார்” இவ்வாறு எல். முருகன் தெரிவித்தார்.

===========