Vaiko sharply criticized DMK, the party is seething with envy over government led by Chief Minister Vijay AI generated
தமிழ்நாடு

தவெக மீது திமுக வயிற்றெரிச்சல் : லஞ்சத்திற்கு விஜய் முற்றுப்புள்ளி, 5 ஆண்டுகள் ஆட்சி நீடிக்கும் : வைகோ பதிலடி...!

முதல்வர் விஜய் தலைமையிலான அரசு மீது திமுகவுக்கு வயிற்றெரிச்சல் என்று வைகோ கடுமையாக சாடியுள்ளார்.

Kannan

திமுக to தவெக - மதிமுக

திமுக கூட்டணியில் இருந்து விலகிய மதிமுக, தவெக அரசுக்கு ஆதரவை அளித்து வருகிறது. திமுகவை கடுமையாக சாடி வரும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, தவெக அரசை பாராட்டி தள்ளுகிறார்.

தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக பேசி வரும் வைகோ, திமுக முன்வைக்கும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.

தவெக மீது திமுகவுக்கு வயிற்றெரிச்சல்

இந்தநிலையில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்தே, திராவிட முன்னேற்றக் கழகம் கடும் வயிற்றெரிச்சலில் இருந்து வருகிறது.

ஆறு மாதங்களில் ஆட்சி கவிழும் - திமுக

இந்த ஆட்சி ஆறு மாதங்களில் கவிழ்ந்துவிடும், மூன்று மாதங்களில் முடிந்துவிடும் என்று திமுகவினர் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

5 ஆண்டுகள் ஆட்சி நீடிக்கும்

நான் ஆணித்தரமாகச் சொல்கிறேன், விஜய் தலைமையிலான அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எந்தவித மாற்றமும் இல்லாமல் உறுதியாகத் தொடரும்.

இந்த அரசை வீழ்த்துவதற்கு திமுகவினர் செய்யும் எந்தவொரு பகீரத முயற்சியும், அவர்கள் அடிக்கும் குட்டிக்கரணங்களும் ஒருக்காலும் பலிக்காது.

கமிஷன், லஞ்சத்திற்கு முற்றுப்புள்ளி

விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் தலைவிரித்தாடிய கமிஷன் கலாச்சாரத்திற்கும், லஞ்சம் மற்றும் ஊழலுக்கும் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் கோடிகளில் லஞ்சம்

முந்தைய திமுக ஆட்சியில் எந்தவொரு அனுமதி வாங்குவதற்கும் 10 லட்சம், 15 லட்சம், ஒரு கோடி, இரண்டு கோடி என கப்பம் கட்ட வேண்டிய அவல நிலை இருந்தது.

ஊழலை ஒழித்த தவெக

ஆனால் இன்று, 10 காசு கூட லஞ்சம் இல்லாமல் மக்கள் நேர்மையாக அனுமதிகளைப் பெறுகிறார்கள். ஊழலை வேரோடு பிடுங்கி எறியும் நேர்மையான அரசாக விஜய் அரசு திகழ்வதால், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்த அரசை முழு மனதோடு ஆதரிக்கிறது.

தவெகவுடன் சிறப்பான உறவு

தவெகவுக்கும் மதிமுகவுக்கும் இடையே மிகச் சிறப்பான மற்றும் வலுவான தோழமை உணர்வு மலர்ந்துள்ளது. தவெக எங்களை மிகவும் மதிக்கிறது.

மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 1,400-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.

மகிழ்ச்சியில் மதிமுக தொண்டர்கள்

‘திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறோம்’ என்று அறிவித்தபோது, தொண்டர்கள் மண்டபமே இடிந்து விழும் அளவிற்கு கரவொலி எழுப்பி, ஆரவாரம் செய்து தங்கள் முழுமையான ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.

தவெகவோடு கைகோர்ப்பதுதான் ம.தி.மு.க தொண்டர்களின் உண்மையான உணர்வும், முழுமையான மனநிலையாகும்.

தவெகவிற்கு அரண் மதிமுக

ஊழலற்ற, மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சியை வழங்கி வரும் விஜய் தலைமையிலான அரசுக்கு ம.தி.மு.க தொடர்ந்து தனது அரணாக நின்று முழு ஆதரவை வழங்கும்” என்று வைகோ குறிப்பிட்டுள்ளார்.

===================