Tamil Movie Actress Saroja Devi Passed Away 
தமிழ்நாடு

விடைபெற்றார் கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி : காளிதாஸ் - ஆதவன் வரை

Actress Saroja Devi Passed Away : கதாநாயகியாக பல ஆண்டுகள் முத்திரை பதித்த, பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார். அவருக்கு வயது 87.

Kannan

திரையுலகில் 50 ஆண்டுகள் :

Tamil Movie Actress Saroja Devi Passed Away : தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சரோஜா தேவி. ஐம்பதாண்டு காலமாக திரைப்படத் துறையில் இருந்த இவர், 200 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்.

விருதுகளுக்கு பெருமை சேர்த்த சரோஜாதேவி :

திரைத்றையினரால் “கன்னடத்துப் பைங்கிளி”, “அபிநய சரசுவதி” போன்ற அடைமொழிகளால் அழைக்கப்படுகிறார். இவர் பல திரைப்பட விருதுகளையும், இந்திய அரசின் பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளையும் வென்றுள்ளார். அதேபோல, வாழ்நாள் சாதனையாளர்களுக்கான இந்திய அரசின் தேசிய விருதும் சரோஜா தேவி-க்கு வழங்கப்பட்டது.

தமிழ்த் திரையில் 25 ஆண்டுகள் :

தமிழ்த் திரையில் 25 ஆண்டுகள் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்த பி. சரோஜாதேவி(Saroja Devi), சினிமாவில் நுழைந்ததே ஒரு விபத்து என்றுதான் சொல்ல வேண்டும். சரோஜாதேவியின் தந்தை பைரவப்பா காவல் அதிகாரி. தாய் ருத்ரம்மா குடும்பத் தலைவி. இவர்களுக்கு நான்காவது மகளாகப் பிறந்த சரோஜாதேவி, பாகவதர் கவி காளிதாஸாக நடித்து, தயாரித்த 'மகாகவி காளிதாஸா' என்ற கன்னடப் படத்தில் 1955-ம் ஆண்டு அறிமுகமானார் சரோஜாதேவி. படம் மிகப் பெரிய வெற்றி. அதற்குத் தேசிய விருதும் கிடைத்தது.

இல்லறமே நல்லறம்’ தமிழில் அறிமுகம் :

தமிழில் உடனடியாக நடிக்க முடியாதபடி கன்னடப் படங்கள் அவருக்குக் குவிந்தன. ‘இல்லறமே நல்லறம்’ என்ற படத்தில் சின்ன வேடத்தில் தமிழில் அறிமுகமானார் சரோஜாதேவி(Saroja Devi). அதன் பின்னர் 2வது கதாநாயகி வேடங்கள் கிடைத்தன. எம்ஜிஆர் சொந்தப்பட நிறுவனம் தொடங்கி இயக்கித் தயாரித்து நடித்த ‘நாடோடி மன்னன்’ படத்தில் ‘ரத்னா’வாக வந்த சரோஜாதேவி, தமிழ் ரசிகர்கள் மனதிலும் ஊடுருவி, சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.

எம்ஜிஆரின் ’பேவரிட்’ ஹீரோயின் :

எம்ஜிஆருடன் நாடோடி மன்னன் தொடங்கித் திருடாதே, தாய் சொல்லைத் தட்டாதே, படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, பெற்றால்தான் பிள்ளையா, அன்பே வா என சரோஜாதேவி நடித்த அத்தனை படங்களும் வெற்றி பெற்றன. இதன்மூலம் எம்ஜிஆர் - சரோஜாதேவியை வெற்றி ஜோடி என்றே ரசிகர்கள் அழைத்தனர்.

கல்யாண பரிசு - காவிய நாயகி :

சரோஜாதேவின் தமிழ்த் திரைப் பயணத்தில் மறக்க முடியாத பரிசென்றே கல்யாணப் பரிசு படத்தைக் கூறலாம். ஸ்ரீதர் இயக்குநராக அறிமுகமான இந்தப் படத்தில் நடித்ததன் மூலமாகவே பெரும் நட்சத்திர அந்தஸ்து பெற்றார் சரோஜாதேவி.

சிவாஜியுடன் வெற்றிப் படங்கள் :

சிவாஜி கணேசனுடன் பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, பார்த்தால் பசி தீரும் என்று தொடங்கி ‘புதிய பறவை’யாகக் காதலித்து அவரைக் கைது செய்ய வரும் ரகசிய ஏஜெண்டாக பிரமாதப்படுத்தினார். படப்பிடிப்பில் ஒழுங்கு, காலம் தவறாமை ஆகியவற்றுக்குப் புகழ்பெற்ற சரோஜாதேவி அன்றைய நாயகியரில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையும் கொண்டவர்.

திருமணத்திற்கு பின்பும் நடிப்பை தொடர்ந்தவர் :

சரோஜாதேவி திருமணத்துக்குப் பிறகும் கணவர் ஸ்ரீ ஹர்ஷாவின் அனுமதியுடன் படங்களில் கதாநாயகியாக நடித்தார். திருமணம் செய்துகொண்டால் வாய்ப்புகள் குறைந்துவிடும் என்ற மாயையை முதலில் உடைத்தெறிந்தவர்.

முன்னணி நாயகர்களின் கதாநாயகி சரோஜாதேவி :

தமிழில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், தெலுங்கில் என்டி ராமாராவ், ஏ நாகேஸ்வரராவ், கன்னடத்தில் ராஜ்குமார் என அன்றைய முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து ஏராளமான வெற்றிப் படங்களை தந்தார். கடைசியாக தமிழில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த ஆதவன் படத்தில் நடித்தார். எம்ஜிஆருடன் 26 படங்களிலும், சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் ஜோடியாக அவர் நடித்துள்ளார்.

வயது மூப்பால் காலமானார் சரோஜாதேவி :

வயது மூப்பால் உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொண்டு வந்த சரோஜாதேவி(Saroja Devi Death), பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரத்தில் தனது வீட்டிலேயே காலமானார். சரோஜாதேவிக்கு ஸ்ரீ ஹர்ஷா என்ற கணவர் இருந்தார். 1986ல் அவர் மறைந்துவிட்டார். புவனேஷ்வரி, இந்திரா என இரு மகள்களும், கவுதம் ராமச்சந்திரன் என்ற மகனும் உள்ளனர்.சரோஜாதேவி மறைவுக்கு(Saroja Devi Passed Away) திரையுலகினர் உட்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

====