Video of students made to chant slogans in a government school: TVK Minister Prabhu in controversy again!
காரைக்குடியில் உள்ள அரசுப் பள்ளிக்கு ஆய்வுக்கு சென்ற அமைச்சர் பிரபு, அங்கிருந்த மாணவர்களை அரசியல் சார்ந்த முழக்கங்களை எழுப்ப வைத்து வீடியோ பதிவு செய்து வெளியிட்ட சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி வளாகத்தில் வீடியோ எடுக்க ஏற்கனவே தடை
அரசுப் பள்ளிகளுக்குள் சென்று ஆய்வுகள் மேற்கொள்ளும் பெயரில் ரீல்ஸ், வீடியோக்கள் எடுத்து வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர்கள் கூட்டத்திலேயே தமிழக முதல்வர் விஜய் திட்டவட்டமாக வலியுறுத்தியிருந்தார்.
முன்னதாக, தவெக எம்.எல்.ஏ-க்களும் அமைச்சர்களும் திடீரென பள்ளிகளுக்குள் சென்று மாணவர்களிடம் கேள்விகள் கேட்பது, பாடங்கள் எடுப்பது போன்ற நிகழ்வுகளை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர்.
இத்தகைய செயல்பாடுகள் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே எதிர்மறையான விமர்சனங்களையே ஏற்படுத்தின.
காரைக்குடி பள்ளியில் நடந்தது என்ன?
முதல்வரின் நேரடி எச்சரிக்கையையும் மீறி, காரைக்குடி அரசுப் பள்ளிக்கு சென்ற அமைச்சர் பிரபு, மாணவர்களை தவெக கட்சி சார்ந்த முழக்கங்களை எழுப்ப வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மாணவர்கள் கோஷமிட்டபோது அவர் முன்னிலையிலேயே மைக்கை மாணவர்கள் பக்கம் திருப்பிப் பிடித்தவாறு வீடியோ பதிவு செய்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இச்சம்பவம் தற்போது மீண்டும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சமூக ஆர்வலர்கள் மற்றும் கட்சியினர் கண்டனம்
அமைச்சரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். பள்ளி செல்லும் சிறு குழந்தைகளிடம் அரசியல் கருத்துகளை திணிக்கக் கூடாது என்றும், பள்ளி வளாகங்களை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தக் கூடாது என்றும் சமூக ஆர்வலர்களும் அரசியல் கட்சியினரும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையானதைத் தொடர்ந்து அமைச்சர் பிரபுவின் இந்த செயலுக்கு முதல்வர் விஜய்யின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
======