Vijay said that Sengottaiyan's political experience will be a great help to TVK 
தமிழ்நாடு

செங்கோட்டையன் அனுபவம் ’தவெக’வுக்கு பெரிய வலிமை : விஜய் வரவேற்பு

Sengottaiyan Join TVK Latest News in Tamil : செங்கோட்டையனின் அரசியல் அனுபவம் தவெகவுக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

Kannan

தவெகவில் செங்கோட்டையன்

Sengottaiyan Join TVK Latest News in Tamil : அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, நடிகர் விஜயை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு தமிழக வெற்றிக் கழகத்தில் அவர் முறைப்படி இணைந்தார். சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் விஜய் முன்னிலையில், அவர் கட்சியில் சேர்ந்தார்.

செங்கோட்டையனுக்கு விஜய் வாழ்த்து

செங்கோட்டையனுக்கு கட்சியின் துண்டை அணிவித்து, உறுப்பினர் அட்டையை வழங்கி விஜய் வரவேற்றார். இதேபோன்று, செங்கோட்டையன் ஆதரவாளர்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் முன்னிலையில் இணைந்தனர். செங்கோட்டையனின் வருகை தவெகவை பொருத்தவரை பெரிய பலமாக கருதப்படுகிறது.

காணொலி வெளியிட்ட விஜய்

தேர்தல் உத்தி, பிரசாரம் வியூகம், வேட்பாளர் தேர்வு போன்றவற்றில் அவரது பங்களிக்கு, கட்சிக்கு பக்க பலமாக இருக்கும் என்று தெரிகிறது.

இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள காணொலியில் கூறியிருப்பதாவது, “20 வயது இளைஞராக இருந்தபோது எம்ஜிஆரை நம்பி, அவருடைய மன்றத்தில் சேர்ந்தவர். சிறிய வயதிலேயே எம்எல்ஏ என்ற ஒரு பெரிய பொறுப்பை ஏற்றவர்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு உறுதுணை

அதன் பிறகு அவருடைய பயணத்தில், அந்த இயக்கத்தின் மிகப்பெரிய இருபெரும் தலைவர்களுக்கு உறுதுணையாக அரசியல் களத்தில் இருந்தவர். இப்படி 50 ஆண்டுகளாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையனுடைய அரசியல் அனுபவமும், அரசியல் களப்பணியும் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்துக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும்.

செங்கோட்டையன் வருகை பலம்

அவரையும், அவருடன் இணைந்த மற்றவர்களையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.

மூன்று முனை (அ) நான்கு முனைப்போட்டி

செங்கோட்டையனை போன்று வேறுபல முக்கிய பிரமுகர்களும் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, தவெகவிற்கு வர வாய்ப்பு உள்ளது. மேலும், அன்புமணி பாமக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகளும் தவெக கூட்டணிக்கு வர வாய்ப்பு இருக்கிறது. எனவே, சட்டசபை தேர்தலில் மும்முனை போட்டி உறுதியாகிறது. சீமானும் தனித்து போட்டியிட்டால், நான்கு முனை போட்டி இருக்கும்.

=================