அரசியல் வரலாற்றில் சாதனை
இந்திய அரசியல் வரலாற்றில் 26 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட எந்தக் கட்சியும் செய்யாத சாதனையை படைத்து இருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். போட்டியிட்ட முதல் தேர்தலில் அமோக வெற்றி, தமிழகத்தில் 59 ஆண்டுகளாக ஆட்சிக் கட்டிலில் இருந்த திராவிட கட்சிகளை வீழ்த்தி இருக்கிறது. ஒற்றை மனிதராக இரண்டு திராவிட கட்சிகளை ஆட்சிக்கு வராமல் தடுத்து, தவெகவை அரியணை ஏற்றுகிறார் ஜோசப் விஜய்.
மாற்றத்தை கொடுத்த தமிழக மக்கள்
தமிழக சட்டசபை தேர்தல் முடிவு மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்துள்ளது. திமுக, அதிமுக என இரு பெரும் திராவிட கட்சிகளை ஒருசேர தவெக வீழ்த்து இருக்கிறது.
தேசியக் கட்சியான காங்கிரசை வீழ்த்தி, 59 ஆண்டுகளாக மாறி மாறி தமிழகத்தை திமுக, அதிமுக ஆட்சி செய்தன. இவற்றுக்கு மாற்று இல்லை என்ற நிலை தான் 2024 மக்களவை தேர்தலை வரை இருந்தது.
முடிவுக்கு வந்த திராவிட கட்சிகள்
எத்தனை தேர்தல்கள் வந்தாலும், தமிழகத்தை திராவிட கட்சிகளின் தான் ஆளும், மாற்று என்பதே இருக்காது என்ற அரசியல் வியூகத்தை உடைத்து இருக்கிறார் விஜய்.
மாற்றத்தை விரும்பிய இளம் தலைமுறை
Gen Z மற்றும் இளைஞர் வாக்குகள், பெண்களின் வாக்குகள் தமிழக வெற்றிக் கழகத்தை பெரிய உயரத்திற்கு இட்டுச் சென்று இருக்கின்றன. யாருடனும் கூட்டணி வைக்காமல், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, திராவிட கட்சிகளின் அனைத்து கணக்குகளையும் உடைத்து காட்டி இருக்கிறார் விஜய்.
வாக்குகளை அறுவடை செய்த தவெக
திமுக, அதிமுக வாக்கு வங்கி தவெகவிற்கு மாறி இருக்கிறது. இலவசங்கள், தேர்தலுக்கு பணம் கொடுப்பதன் மூலம் வாக்குகளை அறுவடை செய்யலாம் என்ற திராவிட கட்சிகளின் கருத்து இந்த முடிவு எதிர்வினை ஆற்றி இருக்கிறது.
தவெகவிடம் தோற்ற திராவிட பிரமுகர்கள்
திமுக அமைச்சர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் யார் என்றே தெரியாத தவெக வேட்பாளர்களிடம் தோற்று போய் இருக்கிறார்கள். கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினே, தவெகவின் வி.எஸ். பாபுவிடம் தனது வெற்றியை பறிகொடுத்து இருக்கிறார்.
ஆளுங்கட்சி மீது அதிருப்தி
வாரிசு அரசியல், ஊழல் குற்றச்சாட்டுகள், ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி ஆகியவை விஜயின் வெற்றிக்கு வழிவகுத்து கொடுத்து இருக்கின்றன.
2000 ஆவது ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் தொடங்கப்பட்ட கட்சிகளில், அறிமுக தேர்தலிலேயே அதிக வாக்கு சதவீதம் பெற்ற கட்சியாக தவெக உள்ளது. 233 தொகுதிகளில் போட்டியிட்ட தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று 35 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இது யாரும் நிகழ்த்தாத சாதனை.
ஆட்சியை பிடித்த 3வது அணி
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை வந்த மூன்றாவது அணி, ஒரு திராவிட கட்சியை வெற்றி பெற வைத்து, மற்றொரு கட்சியை தோல்வி அடையச் செய்யும். இதைத்தான் விஜயகாந்தும், மக்கள் நலக் கூட்டணியும் செய்தார்.
ஒற்றை மனிதராய் சாதித்த விஜய்
ஆனால், இதை மாற்றி அமைத்து இருக்கிறார் விஜய். மூன்றாவது அணியாக இல்லாமல், தனித்து போட்டியிட்டு இரண்டு திராவிட கட்சிகளையும் மண்ணை கவ்வச் செய்து இருக்கிறார். இது தமிழக அரசியல் வரலாற்றில் பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
திராவிடக் கட்சிகளின் 59 ஆண்டுகால ஆதிக்கத்தை முறியடிக்க வேண்டும் என்ற முனைப்பு தவெக ஆதரவாளர்களிடம் ஆழமாக வேரூன்றி இருந்தது, இதற்கு பொது வாக்காளர்களும் சாதகமாக இருந்து இருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுகின்றன.
59 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் தான்
தமிழக தேர்தல்களில் ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் பிரியும் போது, அது மற்றொரு திராவிட கட்சிக்கே சாதகமாக முடியும். ஆனால் இம்முறை விஜய், அந்த அரசியல் சூத்திரத்தை உடைத்து, புதிய அரசியல் பாதையை காட்டி இருக்கிறார்.
வாக்காளர்களை ஒருங்கிணைத்த வெற்றி
இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் திராவிட கட்சிகளின் மீது அதிருப்தியில் உள்ள பொது மக்களை ஒருங்கிணைப்பதில் விஜய் பெரிய வெற்றியை பெற்று இருக்கிறார். இதன் மூலம், அடுத்த 10 ஆண்டுகளுக்கு கூட, தவெக தவிர்க்க முடியாத சக்தியாக தமிழகத்தை கோலோச்ச வாய்ப்பு இருக்கிறது.
கரூர் சம்பவம், விஜயின் குறைவான பிரசாரங்கள், தவெகவிற்கு எதிராக இருக்கும் என்று யூகிக்கப்பட்ட நிலையில், அது முறியடிக்கப்பட்டு இருக்கிறது.
தேர்தல் வியூகத்தில் திராவிட கட்சிகள் தோல்வி
தேர்தல் வியூகங்களை வகுப்பதில் இரண்டு திராவிட கட்சிகளும் வல்லவர்கள் என்றாலும், விஜயின் “அமைதி புரட்சி” அதை தவிடுபொடியாக்கி, திமுகவின் தொடர் ஆட்சி, அதிமுகவின் ஆட்சியை கைப்பற்றும் கனவு தவிடுபொடியாக்கி விட்டது.
அரசியல் விழிப்புணர்வுள்ள தமிழர்கள்
அரசியல் விழிப்புணர்வுள்ள மக்களை கொண்ட தமிழகம் போன்ற மாநிலத்தில், திராவிட சிந்தனை ஆழமாக பதிந்துள்ள சூழலில், மூன்றாவது ஒரு கட்சி இப்படிப்பட்ட சாதனையை நிகழ்த்துவது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது.
விஜய்க்காக வாக்களித்த மக்கள்
2 திராவிட கட்சிகளையும் தனியொருவரால் வீழ்த்தி, விஜய் என்ற ஒற்றை மனிதர் சாதித்து இருக்கிறார். வெற்றி பெற்ற 108 இடங்களில் இரண்டு தொகுதிகளில் விஜய் வேட்பாளர். மீதமுள்ள 106 தொகுதிகளிலும், விஜய் என்ற ஒருவருக்காக மட்டுமே வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
மாற்றத்தை விரும்பிய தமிழர்களுக்கு ஒட்டு மொத்த புரட்சியை பரிசாக வழங்கி இருக்கிறார் விஜய்.
============