Vijay stated that masses have broken the magic calculations due to high voter turnout in assembly elections google
தமிழ்நாடு

”மாயாஜால கணக்குகள் உடைப்பு, நொறுக்கிய மக்கள்” : இளைஞர்கள், பெண்கள் நிகழ்த்திய அதிசயம் : அனைவருக்கும் நன்றி... விஜய்!

சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகி இருப்பதால், மாயாஜால கணக்குகளை வெகுஜன மக்கள் நொறுக்கி இருப்பதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

Kannan

வாக்குப்பதிவில் வரலாற்று சாதனை

தமிழக சட்டமன்ற தேர்தலில் நான்கு முனைப்போட்டி நிலவிய நிலையில், நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் 85.15 சதவீத வாக்குகள் பதிவான. தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் இந்த அளவு வாக்கு சதவீதம் என்பது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

அரசியல் அனைவருக்குமானது

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கும் தவெக தலைவர் விஜய், “ என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும், வணக்கம்.

அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே.

மாயாஜால கணக்குகள் உடைப்பு

இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.

இளைஞர்கள், பெண்கள் ஆர்வம்

அரசியலைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழத் தொடங்கிவிட்டது.

தமிழகம் கொண்டாடிய தேர்தல் திருவிழா

இது எப்போது இருந்து தொடங்கியதென நடுநிலை மனம்கொண்டோர் அனைவரும் உணர்வர். இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன.

ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி உள்ளது.

85% வாக்குகள் தமிழகம் காணாத ஒன்று

85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று.

வாக்குச்சாவடிகள் எங்கும் கோவில்களில் காணப்படும் கூட்டம்போல, குடும்பம் குடும்பமாகக் குழந்தை குட்டிகளுடன் வந்து வாக்களித்ததைக் கண்டு வியக்காதோர் எவரும் இருக்கவே வாய்ப்பில்லை.

ஜனநாயகர்களுக்கு வணக்கம்

அது மட்டுமா?. வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாக்களிப்பதற்காகவே பெரும்பொருள் செலவு செய்து வந்த ஜனநாயகர்களை இருகரம் கூப்பி வணங்காமல் இருக்க முடியுமா?

இது ஒரு தொடக்கம் தான்

தேர்தல் திருவிழா என்றும் ஜனநாயகத் திருவிழா என்றும் சொல்லப்படுவதன் அர்த்தம் சுகப்பட்டதே நேற்றுதான். இந்த 2026 ஏப்ரல் 23 தான். எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே.

அனைவருக்கும் நன்றி

தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்களாகிய, என் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், என் தாத்தா, அப்பா, அண்ணன், தம்பிகள், என் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியறிதலைக் காணிக்கையாக்குகிறேன்.

குட்டி நண்பா, நண்பீஸ்

குறிப்பாக, நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா நண்பீஸ்க்கு என்னுடைய - உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும்.

தவெக நிர்வாகிகளுக்கு நன்றி

குறிப்பாக, நான் நன்றி செலுத்த வேண்டியது, நம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் நம் கழகத் தோழர்களுக்கும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் தான்.

இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும்? எப்படித் தாக்குப் பிடிப்பார்கள் என்று ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் பதிலடி தந்த தோழர்களே…

உங்களுக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும். கழகத் தோழர்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் நன்றி.

நம்பிக்கையோடு இருப்போம்.

நல்லதே நடக்கும்.

வெற்றி நிச்சயம்”

இவ்வாறு அந்தப் பதிவில் அனைவருக்கும் தனது நன்றியை விஜய் தெரிவித்துள்ளார்.

=================