Vijay's speech is a diversionary tactic: CPI(M) strongly condemns it! source: google,ai generated
தமிழ்நாடு

முதல்வர் விஜய்யின் பேச்சு திசைதிருப்பும் தந்திரம் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!

முதல்வர் விஜய்யின் சட்டமன்ற பேச்சு திசைதிருப்பும் தந்திரம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Kavitha prasanna

தவெக கூட்டணி கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவு

தமிழக முதல்வர் விஜய்யின் செயல்பாடுகள் மற்றும் சட்டமன்றப் பேச்சு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் பெ.சண்முகம்

சென்னையில் நடைபெற்ற கட்சியின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தவெக சார்பில் அழைக்கப்பட்டுள்ள கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது எனத் தெளிவுபடுத்தினார்.

தவெக அரசுக்கான ஆதரவு?

தவெக அரசுக்கு வெளியிலிருந்து அளித்து வரும் ஆதரவு தொடரும் என்றும், ஆனால் தவெக நடந்துகொள்பதைப் பொறுத்து தான் தவெகவிற்கு ஆதரவு எப்படி இருக்கும் என்பது தெரியும் என்றும் மக்கள் நலன் சார்ந்த ஆலோசனைகளைத் தொடர்ந்து வழங்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சர்க்காரியா கமிஷன் பேச்சுக்கு எதிர்ப்பு

சட்டமன்றத்தில் முதல்வர் விஜய்யின் உரையை விமர்சித்த பெ.சண்முகம், "3 கோப்புகள் கையில் இருப்பதாகக் கூறும் முதல்வர், அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் 50 ஆண்டுகளுக்கு முந்தைய சர்க்காரியா கமிஷன் குறித்துப் பேசுவது மக்கள் கவனத்தைத் திசைதிருப்பும் தந்திரம்" எனக் குற்றம்சாட்டினார்.

சட்டமன்ற நேரத்தை விரயம் செய்யக்கூடாது

மேலும், எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விகளுக்குப் பேரவையில் முறையான பதில்கள் அளிக்கப்படவில்லை என்றும், மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் சட்டமன்ற நேரத்தை விரயம் செய்யக்கூடாது என்றும் சுட்டிக்காட்டினார்.

மிசா மற்றும் உருவக் கேலி விவகாரம்

அவசரநிலைக் காலத்தின் போது 'மிசா' சட்டத்தில் கைதானவர்கள் குறித்து தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்குப் பதிலளித்த அவர், இஸ்மாயில் கமிஷன் அறிக்கையைப் படித்துப் பார்த்துவிட்டுப் பேசுமாறு அறிவுறுத்தினார்.

முதல்வர் விஜய் காட்டிய உடல்மொழி பொறுப்பற்ற செயல்

மேலும், ஒன்றிய அரசின் அமலாக்கத் துறை முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை மட்டும் வைத்து ஊழல் என வகைப்படுத்துவது ஏற்புடையதல்ல என்றும், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்த அடக்குமுறைகளைக் குறிப்பிடும் வகையில் முதல்வர் விஜய் காட்டிய உருவக் கேலி உடல்மொழி பொறுப்பற்ற செயல் என்றும் கண்டித்தார்.

சட்டமன்றத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்த கோரிக்கை

சட்டமன்றத்தை ஆளும் கட்சியின் பாராட்டு மன்றமாகவோ அல்லது தனிமனிதத் தாக்குதல்களுக்கான இடமாகவோ மாற்றுவது அறமற்றது எனக் குறிப்பிட்ட பெ.சண்முகம், நாகரிகமான அரசியல் விமர்சனங்களை சட்டமன்றத்திற்கு வெளியே வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அவையின் கண்ணியத்தைக் காக்கவும், ஏழை எளிய மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் ஆளும் கட்சிக்குக் கூடுதல் பொறுப்பு உள்ளது எனக்கூறி தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.

=====