villagers of Iraiyur, who are involved in Vengaivayal taken a drastic decision to boycott assembly elections google
தமிழ்நாடு

வேங்கைவயல் குடிநீர் தொட்டி விவகாரம் : துப்பு துலங்காத வழக்கு : தேர்தல் புறக்கணிப்பு, இறையூர் கிராம மக்கள் முடிவு!

வேங்கைவயல் குடிநீர் தொட்டி விவகாரத்தில் உள்ள இறையூர் கிராம மக்கள் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.

Kannan

வேங்கைவயல் விவகாரம்

புதுக்கோட்டை மாவட்டம் முத்துக் காடு ஊராட்சிக்குட்பட்ட கிராமம் தான் வேங்கைவயல். இங்கு 2022ம் ஆண்டு குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம், தமிழகத்தையே உலுக்கிய ஒரு கொடூரமான நிகழ்வு.

இந்தச் சம்பவம் நடந்து பல ஆண்டுகள் கடந்தும், உண்மையான குற்றவாளிகள் இதுவரை கண்டறியப்படவில்லை என்ற அதிருப்தி கிராம மக்களிடம் உள்ளது.

வழக்கின் பின்னணி, சிபிசிஐடி விசாரணை

வேங்கைவயல் கிராமத்தில் உள்ள தலித் குடியிருப்புக்கு நீர் வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது தொடர்பான வழக்கை சிபிசிஐடி (CB-CID) விசாரித்து வருகிறது.

இது சாதி ரீதியான மோதல் அல்ல என்றும், தனிப்பட்ட பகை காரணமாகவே வேங்கைவயலைச் சேர்ந்த மூன்று நபர்களால் இந்தச் செயல் செய்யப்பட்டதாகவும் கூறி வழக்குப் பதிவு செய்தது.

குற்றச்சாட்டை மறுக்கும் மக்கள்

இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை வேங்கைவயல் கிராம மக்கள் முற்றிலுமாக மறுத்து வருகின்றனர். தாங்கள் அப்பாவிகள் என்றும், அண்டை கிராமங்களான இறையூர் மற்றும் முத்துக் காடு பகுதிகளைச் சேர்ந்தவர்களே இதற்குப் பொறுப்பாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்து வருகிறார்கள். இதன் காரணமாக கிராம மக்களிடையே பிரச்னை நிலவி வருகிறது.

இறையூர் மக்கள் கோரிக்கை

இறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சார்பில் வைக்கப்பட்ட பேனர்களில் தேர்தல் புறக்கணிப்பிற்கான காரணங்களை வரிசைப்படுத்தியுள்ளனர்.

* உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்பது அவர்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது.

* தங்களுக்கு எதிராக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் (SC/ST Act) கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

* கிராமத்தின் அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் பொதுநலப் பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும்.

தகவல் அறிந்து சென்ற அதிகாரிகள், தேர்தல் புறக்கணிப்பை கைவிடுமாற கிராம மக்களை கேட்டுக் கொண்டனர்.

தேர்தலை புறக்கணிக்கும் வேங்கைவயல்?

இதனிடையே, பாதிக்கப்பட்ட வேங்கைவயல் கிராம மக்களும், இந்தத் தேர்தலைப் புறக்கணிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவட்ட நிர்வாகத்திற்கு தலைவலி

சமூக அவலத்திற்கு இன்னும் நீதி கிடைக்காத சூழலில், இரு தரப்பு மக்களுமே ஜனநாயகத்தின் முக்கிய கடமையான வாக்குப்பதிவை புறக்கணிக்கத் துணிந்திருப்பது மாவட்ட நிர்வாகத்திற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

நீதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தினால் மட்டுமே இதுபோன்ற பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் எனச் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

============