Viral video of Praggnanandhaa playing chess with the Chief Minister. source:google
தமிழ்நாடு

முதல்வருடன் செஸ் விளையாடிய பிரக்ஞானந்தா : கைகுலுக்கி மகிழ்ந்த விஜய், அரசு சார்பில் ரூ.50 லட்சம்!

நார்வே செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவிற்கு ரூ. 50 லட்சம் ஊக்கத்தொகை: நேரில் வழங்கி வாழ்த்தினார் முதல்வர் விஜய்!

Kavitha prasanna

Viral video of Praggnanandhaa playing chess with the Chief Minister.

நார்வே செஸ் 2026 சர்வதேச தொடரில் சாம்பியன் பட்டம்

நார்வே செஸ் 2026 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு தமிழக முதல்வர் விஜய் ரூ. 50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார். தலைமைச் செயலகத்தில் இருவரும் செஸ் விளையாடிய வைரல் வீடியோ விவரங்கள்!

நார்வே செஸ் 2026 சர்வதேச தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்த சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது பிரக்ஞானந்தாவிற்கு அரசு சார்பில் ரூ. 50 இலட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

முதல்வர் விஜய்யுடன் செஸ் விளையாட்டு: வைரல் வீடியோ

நார்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற தொடரில், உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள மேக்னஸ் கார்ல்சன், வின்சென்ட் கீமர் உள்ளிட்டோரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையுடன் சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவிற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று (08-06-2026) சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை பிரக்ஞானந்தா நேரில் சந்தித்தார். அப்போது தான் வென்ற கோப்பையை முதல்வரிடம் காண்பித்து அவர் வாழ்த்துப் பெற்றார்.

முதல்வருடன் செஸ் விளையாடிய பிரக்ஞானந்தா

இந்த சந்திப்பின் போது, முதலமைச்சர் விஜய் மற்றும் பிரக்ஞானந்தா ஆகிய இருவரும் சுவாரசியமாக செஸ் விளையாடி மகிழ்ந்தனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகின்றன.

தமிழக அரசின் உயரிய ஊக்கத்தொகை

விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ.50 லட்சம் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலையை முதல்வர் விஜய் பிரக்ஞானந்தாவிற்கு வழங்கினார்.

முன்னதாக சிறப்பு உதவித்தொகை

தமிழக அரசின் செய்தி வெளியீட்டின்படி, பிரக்ஞானந்தாவின் திறமையை மேம்படுத்த ஏற்கனவே அரசின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ரூ.30 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

"ஹோம் ஆஃப் செஸ்" அகாடமி மற்றும் அரசின் இலக்கு

விளையாட்டை ஒரு சக்திவாய்ந்த சமூக மாற்றக் கருவியாகக் கருதி தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, சதுரங்க விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் "ஹோம் ஆஃப் செஸ்" (Home of Chess) என்ற தனித்துவமான சதுரங்க அகாடமி நிறுவப்பட்டுள்ளது.

இந்த அகாடமி மூலம் இளம் வீரர்களுக்கு சர்வதேச அளவிலான பயிற்சி முகாம்கள், நவீன மென்பொருள் ஒத்திகைகள், மனவளப்பயிற்சி மற்றும் சர்வதேச மாஸ்டர் (IM), கிராண்ட்மாஸ்டர் (GM) பட்டங்களை வெல்வதற்கான மேம்பட்ட வழிவகைகள் செய்யப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு. ஜெ. மேகநாத ரெட்டி இ.ஆ.ப., பிரக்ஞானந்தாவின் பெற்றோர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து முதல்வருடன் செஸ் விளையாடியது பற்றி பிரக்ஞானந்தா பேசும்போது,

முதல்வர் விஜய்யுடன் செஸ் விளையாடியது சுவாரசியமாக இருந்தது . திடீரென்று செஸ் போர்டு எடுத்து வரச்சொல்லி அவருடைய மேசையிலேயே வைத்து நாங்கள் விளையாடினோம்.

நான் இதை எதிர்பாக்கவே இல்லை. அவர் செஸ் விளையாடுவார் என்றே எனக்கு தெரியாது. நான் தான் வெற்றி பெற்றேன். ஆனால் முதல்வர் நன்றாகவே விளையாடினார்.நான் எப்படி இப்படி விளையாடுகிறீர்கள் என்று கேட்ட போது நான் நண்பர்களுடன் விளையாடுவேன் என்று சொன்னதாக பிரக்ஞானந்தா கூறினார்.

======