தமிழக சட்டமன்ற தேர்தல்
234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருப்பதால், அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் முடுக்கி விட்டுள்ளன. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்கள் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
அதிமுக சார்பில் விருப்ப மனு
இந்த நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் வருகிற 15-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
“தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கட்சி உடன்பிறப்புகள் விருப்ப மனுக்களை அளிக்கலாம்.
15 முதல் 23ம் தேதி வரை மனுக்களை அளிக்கலாம்
தலைமைக் கழகத்தில் வருகின்ற 15.12.2025 – திங்கட் கிழமை முதல் 23.12.2025 செவ்வாய்க் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும்; முதல் நாளான 15.12.2025 அன்று நண்பகல் 12 மணி முதல், அதற்கான படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
===================