வங்கதேச நாடாளுமன்ற தேர்தல்
BNP set for landslide win in Bangladesh, to form government after 20 years : வங்கதேசத்தில் மொத்தம் 300 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஆட்சியமைக்க 151 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
அந்த வகையில் பிஎன்பி தலைமையிலான 10 கட்சிகளின் கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றுகிறது.
பிஎன்பி கட்சி வரலாற்று வெற்றி
முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் கட்சி தான் வங்கதேச தேசியக் கட்சி. 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியில் இருந்த கலிதா ஜியா, ஊழல் காரணமாக அதிகாரத்தை பறிகொடுத்தார்.
உடல் நலக்குறைவால் கலிதா ஜியா கடந்த மாதம் காலமானார். அவரது மகன் தாரிக் ரஹ்மான் (Tarique Rahman) கட்சியின் தலைவராக இருக்கிறார்.
மாணவர் புரட்சிக்கு பிறகு தேர்தல்
வங்கதேசத்தில் 2024ம் ஆண்டு மாணவர் புரட்சிக்குப் பிறகு, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார். அதனைத் தொடர்ந்து 18 மாதங்கள் இடைக்கால அரசு ஆட்சிப் பொறுப்பில் இருந்தது.
இதையடுத்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சுமார் 12.7 கோடி வாக்காளர்கள் பங்கேற்றனர்.
வாக்களிக்க இளைஞர்கள் ஆர்வம்
இதில் 50 லட்சம் பேர் முதல்முறை வாக்களித்த இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது பிஎன்பி கட்சிக்கு பெரிய வெற்றியை ஈட்டித் தந்து இருக்கிறது.
பிஎன்பி - என்சிபி நேரடி போட்டி
ஆவாமி லீக் கட்சியின் 'படகு' சின்னம் இல்லாமல் 30 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இது. தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கட்சிக்கும், ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் இளைஞர்களை மையமாகக் கொண்ட தேசிய குடிமக்கள் கட்சி (NCP) கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவியது.
பிஎன்பி அமோக வெற்றி
299 தொகுகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வாக்குகளை எண்ணும் பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி 200க்கும் மேற்பட்ட இடங்களை, அதாவது 220 தொகுதிகளில் பிஎன்பி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையை உறுதி செய்து, அதிகாரப்பூர்வ வெற்றிச் செய்திக்காக காத்திருக்கின்றன.
இதன்மூலம் 3ல் இரண்டு பங்கு வெற்றி உறுதியாகி இருக்கிறது.
தாரிக் ரஹ்மான் வெற்றி
கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் தான் போட்டியிட்ட டாக்கா மற்றும் போக்ரா ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்று அசத்தி இருக்கிறார்.
இந்த வெற்றியை தொடர்ந்து, வங்கதேசத்தில் பிஎன்பி கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது.
உலகத் தலைவர்கள் வாழ்த்து
இதையடுத்து பிஎன்பி கட்சி மற்றும் தாரிக் ரஹ்மானுக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டாக்காவில் உள்ள அமெரிக்க தூதரகமும் தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
தாரிக் ரஹ்மானின் வேண்டுகோள்
17 ஆண்டுகால வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பிறகு நாடு திரும்பிய தாரிக் ரஹ்மான், தனது தாயார் பேகம் கலிதா ஜியாவின் மறைவையொட்டி எவ்வித வெற்றிக் கொண்டாட்டங்களிலும் ஈடுபட வேண்டாம் என்று தொண்டர்களே கேட்டுக் கொண்டுள்ளார்.
================