வரி விதிப்பில் டிரம்ப் தீவிரம்
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்தே வரி விதிப்பில் டொனால்டு டிரம்ப் அதிக கவனம் செலுத்தி வருகிறார். உக்ரைன் போரை காரணம் காட்டி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது அதிக வரி விதித்து வருகிறார்.
ரஷ்யாவை முடக்க அமெரிக்கா திட்டம்
இதனால், இந்தியா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு நிதி ஆதாரமாக இருக்கும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தை முடக்க அமெரிக்க தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறது.
15% இறக்குமதி - கூடுதல் வரி
ரஷ்யாவிடம் இருந்து உலக நாடுகள் எண்ணெய் வாங்குவதை தடுக்கும் விதமாக 15 சதவீதத்திற்கும் அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா முடிவு செய்தது.
5 நாடுகளுக்கு குறி
இந்த மசோதா இந்தியா, சீனா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான் ஆகிய 5 நாடுகளை குறி வைத்து கொண்டு வரப்பட்டுள்ளது.
சீனாவுக்கு அடுத்தபடியாக ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நாடாக இந்தியா உள்ளது.
அதிபருக்கு கூடுதல் அதிகாரம்
மறைந்த குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் பெயரிலான இந்த மசோதா, ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் ஐந்து நாடுகள் மீது 100 சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் வழங்குகிறது.
செனட் சபையில் நிறைவேற்றம்
அமெரிக்க செனட் சபையில் இந்த மசோதா 86-11 என்ற பெரும்பான்மை வாக்குகளில் நிறைவேறியது. இது அதிபர் டிரம்பிற்கு கிடைத்த பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு பாதிப்பு
இந்த மசோதா சட்டமானால், இந்தியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பில்லியன் கணக்கிலான பொருட்களுக்கு கடுமையான வரி விதிக்கப்படும்.
இதனால், அமெரிக்க சந்தையில் இந்திய பொருட்களின் விலையானது அதிகரிக்கும். இறக்குமதி குறைந்தால், இந்திய வணிகம் பாதிக்கபடும்.
பிரதிநிதிகள் சபையில் மசோதா
செனட் சபையில் ஒப்புதல் பெற்றுள்ள இந்த மசோதா, அடுத்ததாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்படும். இந்த சபை வரும் ஆகஸ்ட் 31 அன்று கூடி இந்த மசோதா குறித்து விவாதித்து ஒப்புதல் வழங்கும்.
ரஷ்யாவுக்கு நெருக்கடி
எண்ணெய் வர்த்தகம் தவிர, ரஷ்ய அரசியல் தலைவர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் பெரும் தொழிலதிபர்கள் மீதான தடைகளையும் இந்த சட்டம் நீட்டிக்கிறது. அத்துடன், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளையும் 2031 வரை நீட்டிக்கிறது.
இந்த மசோதாவை ஆதரித்துப் பேசிய ஜனநாயகக் கட்சி செனட்டர் ரிச்சர்ட் புளூமெந்தல், உக்ரைன் போரை நிறுத்த இத்தகைய கடுமையான நடவடிக்கை அவசியம் என்றார்.
ஜனநாயக கட்சி எதிர்ப்பு
அதே நேரத்தில், டொனால்ட் டிரம்ப் தலைமையிலான தற்போதைய அமெரிக்க அரசிடம் இந்த மசோதா மிக விரிவான வரி விதிப்பு அதிகாரங்களை ஒப்படைக்கிறது என்றும், இது உலகளாவிய வர்த்தகப் போரை தீவிரப்படுத்த வழிவகுக்கும் என்றும் சில ஜனநாயகக் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
=========