China, actively pursuing project to create artificial sun, paved way for electricity revolution AI generated
உலகம்

’EAST’ : ”செயற்கை சூரியன்” சீனா பிரம்மாண்ட திட்டம் : 582 டன் எடையுள்ள காந்தம் : அபரிதமான மின்உற்பத்தி, 2030 இலக்கு.!

செயற்கை சூரியனை உருவாக்கும் திட்டத்தில் தீவிரம் காட்டி வரும் சீனா, விரைவில் மின்சாரப் புரட்சிக்கான வழியை உருவாக்கி இருக்கிறது.

Kannan

சீனாவின் அசுர வளர்ச்சி

அறிவியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு எனப் பல துறைகளிலும் அண்டை நாடான சீனா,உலக நாடுகளுக்கு சவால் விடுத்து வருகிறது.

செயற்கை சூரியன்

இந்த நிலையில், சீனா ஒரு செயற்கை சூரியனை உருவாக்கும் நோக்கில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது உண்மையான சூரியனை உருவாக்குவது கிடையாது.

சூரியன் எவ்வாறு ஆற்றலை உருவாக்குகிறதோ, அதே செயல்முறையை ஆய்வகத்தில் கட்டுப்படுத்தி, அபரிமிதமான அளவில் மின்சாரம் உற்பத்தி செய்வதே சீனாவின் இலக்கு.

அணு இணைவு மூலம் ஆற்றல் உற்பத்தி

அணு இணைவு (Nuclear Fusion) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சூரியனில் நடைபெறும் ஆற்றல் உற்பத்தியை பூமியில் மீண்டும் உருவாக்கும் முயற்சியே செயற்கை சூரியன் திட்டம்.

சூரியனில் பெருமளவு ஆற்றல்

சூரியனில், ஹைட்ரஜன் அணுக்கள் மிக அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்தில் ஒன்றிணைந்து ஹீலியம் அணுக்களாக மாறுகின்றன.

இது 100 மில்லியன்°C-க்கும் அதிகமான வெப்பநிலையில் ஹைட்ரஜன் அணுக்களை இணைத்து, கார்பன் டை ஆக்சைடை உருவாக்காமல் பெருமளவு ஆற்றலை வெளியிடுகிறது.

சீனாவும் இதே அணு இணைவு செயல்முறையை பூமியில் உருவாக்க முயற்சி செய்து வருகிறது.

582 டன் எடையில் காந்தம்

சீன அறிவியல் அகாதமி வடிவமைத்து இருக்கும் வளையப்புல மீக்கடத்தி காந்தம், 21 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும், 582 டன் எடையும் கொண்ட ஒரு பிரம்மாண்டமான 'D' வடிவக் கட்டமைப்பாகும்.

சீனாவின் ’EAST’ திட்டம்

சீனா உருவாக்கும் இந்த திட்டத்திற்கு ’EAST’ (Experimental Advanced Superconducting Tokamak)எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் உள்ள ஹெஃபெய் நகரில் அமைந்துள்ளது.

டோகமாக் எனப்படும் வளைய வடிவ காந்த உலையில் மிக அதிக வெப்பமுள்ள பிளாஸ்மாவை காந்தப் புலங்களால் கட்டுப்படுத்துகிறது.

மிக அதிகமான வெப்பஅலை

நீண்ட நேரம் நிலையான அணு இணைவு நிகழச் செய்வதால், பல முறை 100 மில்லியன் °C-க்கும் அதிகமான வெப்பநிலை உருவாக்கப்படும்.

சில சோதனைகளில் 1,000 வினாடிகளுக்கும் மேல் அதிக வெப்ப பிளாஸ்மாவை நிலைநிறுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மின் உற்பத்தியில் புதிய மைல்கல்

இந்த சோதனையில் வெற்றி கிடைத்தால், மிக அபரிதமான மின் ஆற்றலை சீனாவால் உற்பத்தி செய்ய முடியும், அதன் காரணமாக அந்த நாட்டில், மின்சார பற்றாக்குறை என்பதே இருக்காது.

இந்தத் திட்டம் வெற்றியடைந்தால், உலகின் எதிர்கால மின்சார உற்பத்தி முறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அறிவியல் சாதனையாகக் கருதப்படும்.

2030 - சீனாவின் இலக்கு

2030ம் ஆண்டுக்குள் அணுக்கரு இணைவு ஆற்றலில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சீனாவின் லட்சியத் திட்டத்தில் இந்தச் சாதனை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டும்.

ஆராய்ச்சியில் உலக நாடுகள்

சீனா தவிர, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இதுபோன்ற அமைப்புகளும் அணு இணைவு மின்சாரத்தை நடைமுறைக்குக் கொண்டுவர தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றன.

மின்சார தட்டுப்பாடே வராது

சீனாவின் இந்தத் திட்டம் வெற்றி அடைந்து, பிற நாடுகளும் செயல்படுத்த தொடங்கினால், உலக அளவில் மின் உற்பத்தி என்பது மிக அபரிதமாக இருக்கும். எரிபொருளுக்காக வேறு எதையும் நாட வேண்டிய அவசியமே அதன் பிறகு இருக்காது எனத் தெரிகிறது.

===============