டெல்லி வந்தடைந்தார் சீனா அதிபர் :
18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் புதுடெல்லி வந்தடைந்துள்ளார்.
கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் என்பதால் இந்த வருகை சர்வதேச அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
2019-ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு ஜி ஜின்பிங் இந்தியா வரவில்லை.
குறிப்பாக 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு இருநாட்டு உறவுகளில் பதற்றம் ஏற்பட்ட நிலையில், தற்போது அவர் இந்தியா வந்திருப்பது முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு இந்தியா தலைமையில் நடைபெறும் 18-வது BRICS மாநாட்டில் உலக பொருளாதாரம், வர்த்தகம், உள்ளூர் நாணயங்களில் பரிவர்த்தனை, செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் பங்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து தலைவர்கள் ஆலோசிக்க உள்ளனர்.
மாநாட்டின் ஓரமாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜி ஜின்பிங் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லை விவகாரம், வர்த்தக உறவுகள், முதலீடு மற்றும் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் இந்த சந்திப்பில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
BRICS மாநாட்டை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உலகின் முக்கிய தலைவர்கள் பங்கேற்பதால் மாநாட்டு வளாகங்கள் மற்றும் முக்கிய சாலைகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட பல உலகத் தலைவர்களுடன் ஒரே மேடையில் ஜி ஜின்பிங் பங்கேற்பது, BRICS கூட்டணியின் வளர்ந்து வரும் செல்வாக்கை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தியா - சீனா உறவுகளின் அடுத்தகட்ட முன்னேற்றம் குறித்தும் இந்த வருகை முக்கிய சிக்னல்களை வழங்கும் என அரசியல் நோக்கர்கள் மதிப்பிடுகின்றனர்.
=================