PM Modi on India England Relations on CETA India UK Trade Agreement 
உலகம்

CETA 2025 : இந்தியா - இங்கிலாந்து உறவில் பரஸ்பர நம்பிக்கை - மோடி!

PM Modi on India England Relations : இந்தியா - இங்கிலாந்து இடையேயான கூட்டாண்மை உலகின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முக்கிய அடித்தளமாக இருந்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Bala Murugan

மும்பை வந்த ஸ்டார்மெர் :

PM Modi on India England Relations : இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர், மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இதையடுத்து, இரு தலைவர்கள் முன்னிலையில் இரு நாடுகளின் உயர் மட்டக் குழுவினரின் சந்திப்பு நடைபெற்றது. கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி இங்கிலாந்து சென்றபோது இந்தியா - இங்கிலாந்து இடையே கையெழுத்தான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் (CETA) அடிப்படையில், வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

செய்தியாளார்களை சந்தித்த இரு தலைவர்கள்

பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பிரதமர் கெய்ர் ஸ்டார்மெரின் தலைமையின் கீழ், இந்தியா - இங்கிலாந்து இடையேயான உறவுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் எனது இங்கிலாந்து பயணத்தின்போது வரலாற்றுச் சிறப்புமிக்க விரிவான பொருளாதார மற்றம் வர்த்தக ஒப்பந்தம் (CETA) கையெழுத்தானது.

புதிய ஒப்பந்தம் - வேலை வாய்ப்புகள்

இந்த ஒப்பந்தத்தின் மூலம், இரு நாடுகளுக்கும் இடையேயான இறக்குமதி செலவு குறையும். இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். வர்த்தகம் அதிகரிக்கும். இது நமது தொழில்கள் மற்றும் நுகர்வோருக்குப் பயனளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில மாதங்களில், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வணிகக் குழுவுடன் நீங்கள் இந்தியாவுக்கு வருகை தந்திருப்பது, இந்தியா - இங்கிலாந்து கூட்டாண்மையின் புதிய வீரியத்தின் அடையாளம் என்றும் கூறினார்.

இந்தியா - இங்கிலாந்து இடையே மிகப் பெரிய வணிகத் தலைவர்கள் உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இன்று, இந்தியா - இங்கிலாந்து தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றம் மற்றும் உலகளாவிய ஃபின்டெக் விழா ஆகியவற்றில் உரையாற்ற உள்ளோம். இவை அனைத்திலும், இரு நாடுகளின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

இந்தியா- இங்கிலாந்து உறவின் அடித்தளம்

இந்தியாவும் இங்கிலாந்தும் இயற்கையான கூட்டாளிகள். ஜனநாயகம், சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி போன்ற மதிப்புகளில் உள்ள பரஸ்பர நம்பிக்கை, நமது உறவுகளுக்கு அடித்தளமாக உள்ளது. உலகில் ஸ்திரமின்மை நிலவும் தற்போதைய சூழலில், இந்தியா - இங்கிலாந்து இடையே வளர்ந்து வரும் கூட்டாண்மை உலகின் ஸ்திரத்தன்மைக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் முக்கியமான அடித்தளமாக இருந்து வருகிறது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க : காஸாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகச்சிறந்த நகைச்சுவை - அண்ணாமலை!

கடல்சார் உறுதி

இன்றைய கூட்டத்தில், இந்தோ - பசிபிக், மேற்கு ஆசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை, உக்ரைன் மோதல் குறித்து விவாதித்தோம். உக்ரைன் மோதல் மற்றும் காசா பிரச்சினைகளைப் பொறுத்தவரை, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலம் அமைதிக்கான அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்படுவதை இந்தியா ஆதரிக்கிறது. இந்தோ - பசிபிக் பிரந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை அதிகரிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். என்று தெரிவித்தார்.