22வது நாளாக நீடிக்கும் போர்
Iran's reported launch of two intermediate-range ballistic missiles toward a US-UK base in Diego Garcia in the Indian Ocean ; ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல் 22வது நாளாக நீடிக்கிறது. ஓரிரு வாரங்களில் போர் முடிந்து விடும், ஈரான் அடிபணியும் என்ற எதிர்பார்ப்புகள் போய்த்து போயின. மூன்று வாரங்கள் கடந்தும், முக்கிய தலைவர்களை இழந்த பிறகும், ஈரான் உறுதியாக நிற்கிறது.
வலிமையுடன் நிற்கும் ஈரான்
அந்நாட்டின் எண்ணெய் வயல்கள், ராணுவம், கடற்படை, விமானப்படை தளங்களை இஸ்ரேலும், அமெரிக்காவும் அழித்த பிறகு, ட்ரோன், ஏவுகணை தாக்குதல் ஈரான் தொடர்கிறது. அதற்கு முக்கிய காரணம் பரவலாக்கப்பட்ட அதிகார பகிர்வு தான்.
ஈரானின் தாக்குதல், அதிரும் அமெரிக்கா
ஈரானின் எந்த மாகாணமும் தன்னிச்சையாக முடிவெடுத்து தாக்குதல்களை நடத்தலாம்.
அந்த மாகாணங்களில் உள்ள ட்ரோன்கள், ஏவுகணைகளை அவை சுதந்திரமாக பயன்படுத்த ஈரான் தலைமை அதிகாரம் வழங்கி இருக்கிறது.
இதுதான், அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது.
தப்புக் கணக்கு போட்ட அமெரிக்கா
ஈரானிடம் குறைந்த ஆயுதங்கள் குறுகிய தொலைவு சென்று தாக்கும் ட்ரோன்கள், ஏவுகணைகள் மட்டுமே இருப்பதாக அமெரிக்கா நம்பியிருக்கும் நிலையில், முதன்முறையாக 4 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ள டியாகோ கார்சியா ராணுவ தளத்தை தகர்க்க ஏவுகணைகளை செலுத்தியது ஈரான்.
டியாகோ கார்சியா ராணுவ தளம்
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த டியாகோ கார்சியா தீவினை ராணுவ தளமாக அமெரிக்காவும், பிரிட்டனும் கூட்டாக பயன்படுத்தி வருகின்றன.
இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள இந்த இடம், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியா ஆகிய மூன்று முக்கிய பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ளது.
வான்வழி மற்றும் கடற்படை நடவடிக்கைகளுக்கு முக்கிய மையமாக செயல்படுகிறது.
குறிப்பாக ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளில் இந்தத் தளம் முக்கிய பங்கு வகித்தது.
பாலிஸ்டிக் ஏவுகணைகள்
இந்த இடத்தை நோக்கி இரண்டு நடுத்தர ரக பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. அதில் ஒன்று பறக்கும் போதே தொழில்நுட்பக் கோளாறால் சிதறி விழுந்ததாக கூறப்படுகிறது.
மற்றொரு ஏவுகணையை நோக்கி அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று எஸ்எம்-3 இடைமறிப்பு ஏவுகணையை ஏவியது.
அந்த இடைமறிப்பு முயற்சி இலக்கை வெற்றிகரமாக அழித்ததா என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.
ஏவுகணைகள் ஏவப்பட்ட நேரம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
அமெரிக்காவின் பாதுகாப்பான தளம்
அமெரிக்காவின் மிகவும் பாதுகாப்பான ராணுவ தளமாக டியாகோ கார்சியா இருந்து வருகிறது. அதை தகர்க்க ஏவுகணைகளை ஈரான் செலுத்தி இருப்பது, அதிபர் டிரம்பை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
2 ஆயிரம் கி.மீ. தூரத்தில் உள்ள இலக்குகளை மட்டுமே ஈரான் ஏவுகணைகள் தாக்கும் என்று அமெரிக்கா கணித்து வைத்த நிலையில், தற்போது 4 ஆயிரம் கிலோ மீட்டருக்கு ஏவுகணை பாய்ந்து இருப்பது மேற்கத்திய நாடுகளை திகைப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தல்
இதன் மூலம் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கா தளங்கள், போர் கப்பல்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறது. இவை அனைத்தும் ஈரானின் கண்காணிப்பு வளையத்திற்குள் தான் இருக்கின்றன என்ற உண்மை, அமெரிக்காவை பீதியில் ஆழ்த்தி இருக்கிறது.
======