18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெள்ளிக்கிழமை டெல்லியில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடந்த இரண்டு வாரங்களில் இரு தலைவர்களும் சந்திக்கும் இரண்டாவது நிகழ்வாக இது அமைந்துள்ளது.
இந்த சந்திப்பில் இந்தியா - ரஷ்யா இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது, எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது மற்றும் இரு நாடுகளின் பொருளாதார கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்புத் துறை, சிவில் அணுசக்தி, உரத் துறை, முக்கிய கனிம வளங்கள், உற்பத்தித் துறை, ரயில்வே மற்றும் எஃகு உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் மோடி - புதின் ஆலோசனை நடத்தினர்.
உக்ரைன் போர் தொடர்பாக அமைதி மற்றும் தூதரக பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
உலகளாவிய பதற்றங்களை குறைப்பதில் உரையாடலின் முக்கியத்துவம் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
சந்திப்பின் போது, தமிழரின் பெருமைமிகு இலக்கியமான திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பு பதிப்பை பிரதமர் மோடி, அதிபர் புதினுக்கு பரிசாக வழங்கினார்.
இது இந்தியா - ரஷ்யா கலாச்சார உறவுகளை வெளிப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெறும் BRICS உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியன், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
உலக பொருளாதாரம், உள்ளூர் நாணய வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பிராந்திய மோதல்கள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன .
==================