President Trump has caused a stir by claiming that he prevented a nuclear war between India and Pakistan google
உலகம்

India vs Pakistan : `'நான் தலையிடவில்லை என்றால் பாக். பிரதமர் இறந்திருப்பார்” : பகீர் கிளப்பிய அதிபர் டிரம்ப்

இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுதப்போரை தான் தடுத்து நிறுத்தியதாக, கூறி பரபரப்பை கிளப்பி இருக்கிறார் அதிபர் டிரம்ப்.

Kannan

அதிபர் டிரம்ப் தம்பட்டம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற இருந்த மிகப்பெரிய போரை தான் தடுத்து நிறுத்தி விட்டதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். உலக அளவில் 8 போர்களை நிறுத்தியதாக கூறும் அவர், அமைதிக்கான நோபல் பரிசினை மிகவும் எதிர்பார்த்தார்.

அமெரிக்க பாதுகாப்பு - டிரம்ப் பெருமிதம்

இந்தநிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ட்ரம்ப், "உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அமெரிக்கர்களின் பாதுகாப்பை பெருமையுடன் மீட்டெடுத்து வருகிறோம். எனது முதல் 10 மாத பதவிக்காலத்தில் 8 போர்களை நிறுத்தி இருக்கிறேன். இதற்காக எனது நிர்வாகம் கடுமையான உழைப்பை கொடுத்து இருக்கிறது.

இந்தியா - பாகிஸ்தான் போர்

இந்தியா-பாகிஸ்தான் போர் என்னுடைய தலையீடு காரணமாக பெரிய அளவில் நிகழாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. அப்படி இல்லாமல் அமெரிக்கா வேடிக்கை பார்த்து இருந்தால், இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் வெடித்து இருக்கும்.

பாகிஸ்தான் பிரதமர் உயிர் தப்பினார்

அப்படிப்பட்ட ஒரு போரானது நடந்து இருந்தால், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் உயிரிழந்து இருப்பார். மூன்றரை கோடி பாகிஸ்தானியர்கள் இறந்து போயிருப்பார்கள்.

ரஷ்யா - உக்ரைன் சண்டை

ஒன்பதாவது போரை முடிவுக்குக் கொண்டுவர எனது நிர்வாகம் மிகவும் கடினமாக உழைத்து வருகிறது.ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரில் நடத்தப்பட்ட படுகொலைகள், நான் அதிபராக இருந்திருந்தால் ஒருபோதும் நடந்திருக்காது.

அமெரிக்கர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்

இப்போது அமெரிக்காவை பார்த்து எதிரிகள் பயப்படுகிறார்கள். அதற்கு காரணம் என்னுடைய நிர்வாகம் தான். அமெரிக்க பாதுகாப்புத்துறை முன் எப்போதும் இல்லாத அளவு வலிமையுடன் இருக்கிறது.

அமெரிக்க மக்கள் முழுமையாக பாதுகாப்புடன், நிம்மதியாக இருக்கிறார்கள்” இவ்வாறு அதிபர் டொனால்டு டிரம்ப் உரையாற்றினார்.

==================