வரி விதிப்பில் பிடிவாதம் :
Donald Trump Tariffs on BRICS Country : அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல் வரி விதிப்பில் கெடுபிடி காட்டி வருகிறார் ட்ரம்ப். இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி அவரது கொள்கையாகவே உள்ளது.
பல்வேறு நாடுகளுக்கான வரியை கிடுகிடுவென உயர்த்திய அவர், கடும் எதிர்ப்பு காரணமாக வரிவிதிப்பு முடிவை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார். இந்த அவகாசம் வரும் 9ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள ட்ரம்ப் அழைப்பு விடுத்தார். இதையடுத்து பல்வேறு நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
பிரிக்ஸ் உச்சி மாநாடு :
இந்த சூழலில், பிரிக்ஸ் அமைப்பு மாநாடு(BRICS Summit 2025) நடைபெற்றது. இந்த கூட்டமைப்பில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 10 நாடுகள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நிலையில், பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு 10 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
பிரிக்ஸ் நாடுகளுக்கு கூடுதல் வரி :
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பிரிக்ஸ் நாடுகளின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும். இந்தக் கொள்கைக்கு எந்த விதிவிலக்கும் இருக்காது என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.
ஏற்கனவே, அமெரிக்க டாலருக்கு(US Dollar) மாற்றாக, பொது கரன்சியை உருவாக்க நினைத்தால், பிரிக்ஸ் நாடுகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
=====