US President is not allowed to impose taxes US Supreme Court ruling imposes a 10 percent tax decision on India! Source : Truth Social
உலகம்

வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு அனுமதியில்லை : அமெரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பால் 10 சதவிகிதமான வரி!

ட்ரம்ப் விதித்த வரி விதிப்பு சட்​ட​விரோத​மானது என அந்நாட்டு உச்ச நீதி​மன்​றம் உத்தரவிட்ட நிலையில், இந்தியாவுக்கான வரியை 10% என்ற அளவில் அதிபர் நிர்ணயித்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

Baala Murugan

ஐஇஇபிஏ சட்​டம் அதிபருக்கு வரி​களை விதிக்க அனு​மதி அளிக்​க​வில்லை

US Supreme Court Tariff Decision Impact on India : அமெரிக்​க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சர்​வ​தேச அவசர​கால பொருளா​தார அதி​காரச் சட்​டத்​தின் (ஐஇஇபிஏ) கீழ், பரஸ்பர வரி விதிப்பு முறையை கொண்டு வந்தார். இந்த சட்டத்தின் கீழ், பல்வேறு நாடுகளுக்கும் அந்த நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வரிகளை விதித்தார். ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​த​தால், இந்​தியா மீதான வரியை 50% ஆக உயர்த்​தி​னார். இதுபோல், பல நாடுகளுக்கும் அவர் வரியை நிர்ணயித்தார். அமெரிக்க நாடாளு​மன்​றத்​தின் ஒப்​புதல் இல்​லாமல் இவ்வாறு வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து ‘லேர்​னிங் ரிசோர்​சஸ், வி.ஓ.எஸ் செலக்​சன்ஸ் என்ற நிறு​வனங்​கள் வழக்கு தொடர்ந்​தன. இதை விசா​ரித்த உச்சி நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலை​மையி​லான அமர்வு, வரி​களை விதிக்​கும் அதி​காரம் நாடாளு​மன்​றத்​துக்கே உள்​ளது; ஐஇஇபிஏ சட்​டம் அதிபருக்கு வரி​களை விதிக்க அனு​மதி அளிக்​க​வில்லை என்று கூறியது.

இந்தியா வரி குறித்து மனம் திறந்த டிரம்ப்

இதனால், ட்ரம்ப் விதித்த வரிகள் முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்டது. இந்நிலையில், 1974ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வர்ததக சட்டத்தின் பிரிவு 122ன் கீழ், 150 நாட்களுக்கு பயன்படுத்துவதற்கான தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்ட நாடுகளுக்கான வரி 10% ஆக இருக்கும் என அறிவித்தார். இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகாத நிலையில், இந்தியாவுக்கான இறக்குமதி வரி எவ்வாறு இருக்கும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த டொனால்ட் ட்ரம்ப், ‘‘எதுவும் மாறாது. அவர்கள் வரிகளைச் செலுத்துவார்கள்.

நாங்கள் வரிகளை செலுத்த மாட்டோம். இது முன்பு இருந்ததற்கு நேர்மாறானது. இந்திய பிரதமர் மோடி ஒரு சிறந்த மனிதர். அவரை எதிர்க்கும் மக்களைவிட அவர் புத்திசாலி. அவர் எங்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருந்தார். எனவே, நாங்கள் இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்தோம். அது இப்போது ஒரு நியாயமான ஒப்பந்தம். அவர்கள் வரி செலுத்துகிறார்கள். நாங்கள் வரிகளை செலுத்த மாட்டோம். இந்தியா உடனான ஒப்பந்தம் தொடங்கிவிட்டது. அனைத்து ஒப்பந்தங்களும் தொடங்கி உள்ளன’’ என தெரிவித்தார்.

அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை

இந்தியா உடனான தனது உறவு குறித்த கேள்விக்கு, ‘‘இந்தியா உடனான எனது உறவு அற்புதமானது. நாங்கள் இந்தியாவுடன் வர்த்தகம் செய்கிறோம். இந்தியா, ரஷ்யாவில் இருந்து வெளியேறியது. இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கிக் கொண்டிருந்தது. எனது வேண்டுகோளின்படி அவர்கள் பின்வாங்கினர். ஏனெனில், நாங்கள் அதை (உக்ரைன் போர்) தீர்க்க விரும்புகிறோம்’’ என தெரிவித்தார். இந்நிலையில், வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், ‘‘அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்ட அனைத்து நாடுகளுக்குமான தற்காலிக வரி 10% ஆக குறைகிறது. இந்தியாவுக்கும் இது பொருந்தும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.