அமெரிக்காவில் வேலை செய்யும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், எச்-1பி உள்ளிட்ட பல்வேறு வேலைவாய்ப்பு விசாக்களுக்கு வழங்கப்பட்டு வரும் 60 நாள் அவகாசத்தை நீக்க டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது ஒருவர் வேலை இழந்தால், புதிய வேலை தேடவோ அல்லது விசா நிலையை மாற்றிக்கொள்ளவோ 60 நாட்கள் வரை அமெரிக்காவில் தங்க அனுமதி உள்ளது.
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை (DHS) வெளியிட்டுள்ள புதிய முன்மொழிவின்படி, வேலை இழக்கும் விசா வைத்திருப்போர் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய நிலை உருவாகலாம்.
இதன் மூலம் தற்போதுள்ள 60 நாள் கிரேஸ் பீரியட் (Grace Period) ரத்து செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த மாற்றம் எச்-1பி விசா வைத்திருப்பவர்களை மட்டுமின்றி, எல்-1, ஓ-1, டிஎன், இ-1, இ-2, எச்-1பி1 மற்றும் இ-3 உள்ளிட்ட பல்வேறு வேலைவாய்ப்பு விசா வைத்திருப்பவர்களையும் பாதிக்கக்கூடும்.
குறிப்பாக அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் மீது இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் எச்-1பி விசா மூலம் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகின்றனர்.
வேலை இழந்த பிறகு புதிய நிறுவனத்தில் வேலை பெறுவதற்காக பலர் இந்த 60 நாள் அவகாசத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
புதிய விதி அமலுக்கு வந்தால், வேலை இழந்த உடனேயே நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்படலாம்.
இது தற்போது ஒரு முன்மொழிவு மட்டுமே. பொதுமக்கள் மற்றும் தொழில் துறையினரின் கருத்துகளைப் பெற்ற பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும்.
இருப்பினும் இந்த அறிவிப்பு வெளிநாட்டு பணியாளர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் இந்த மாற்றத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
================