தற்காலிகமாக சண்டை நிறுத்தம்
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்தி பிப்ரவரி மாதம் முதல் நடத்தி வந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஏற்பட்டது.
120 நாட்களுக்கும் மேலாக நீடித்து, உலக பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திய ஹோர்முஸ் நீரிணை மூடல் விவகாரமும் முடிவுக்கு வந்தது.
ஹோர்முஸ் நீரிணையில் இயல்புநிலை
அங்கு நிலைமை சீராக, எண்ணெய் கப்பல்கள் தொடர்ந்து செல்லும் நிலை உருவானது. ஆனால், இந்த மகிழ்ச்சி சில நாட்களுக்கு கூட நீடிக்கவில்லை.
மீண்டும் போர்
இந்த அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமான எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, அமெரிக்க ராணுவமும் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் படகுகள் மீது கடுமையான வான்வழித் தாக்குதல்களை தொடுத்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது.
அமைதி ஒப்பந்தம் ரத்து
இதனால் கோபமுற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்ததுடன், அந்நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
இதனால், மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் நிலவுகிறது. தவிர, அமெரிக்கா ஈரான் மீது தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.
ஈரானின் கொலை பட்டியல்
இந்த நிலையில், ஈரானின் கொலைப் பட்டியலில் தான் முதலிடத்தில் இருப்பதாகவும், தன்னைக் கொலை செய்ய அந்நாடு சதித்திட்டம் தீட்டக்கூடும் எனவும் அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.
தலைவர்களை இழந்த ஈரான்
துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “அவர்களுக்குத் தலைவர்கள் இருந்தார்கள், அவர்கள் போய்விட்டார்கள். இப்போது அவர்களுக்கு வேறு ஒரு தலைமைக் குழு இருக்கிறது. அவர்களும் போய்விடலாம்.
நானும்கூட போய்விடலாம், ஏனென்றால் நான்தான் அவர்களின் முதன்மை இலக்கு. ஈரானின் கொலைப் பட்டியலில் நான் முதலிடத்தில் இருக்கிறேன். அவர்கள் அமெரிக்க தலைவரை வீழ்த்த விரும்புகிறார்கள்.
நானே கூட கொல்லப்படலாம்
அவர்கள் மிகவும் மோசமான மற்றும் நோய்வாய்ப்பட்ட மனிதர்கள். எனது உயிருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் இருக்கிறது. தனது அதிபர் பதவிக்காலம் முடிவதற்குள், தான் கொல்லப்படலாம்.
எனக்கு அதிருஷ்டம் இருப்பதால், தொடர்ந்து தப்பி வருகிறேன். இது தொடர்ந்து கைகொடுக்காது என்றும் எனக்கும் தெரியும்.
எது எப்படி இருந்தாலும், உலக நாடுகளுக்கு ஈரான் அச்சுறுத்தலாக இருப்பதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். விரைவில் ஈரான் அழித்து ஒழிக்கப்படும்” என்று டிரம்ப் ஆவேசமாக தெரிவித்தார்.
==============