ரஷ்யாவிடம் எண்ணெய், எரிபொருட்களை வாங்கும் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கும் மசோதாவுக்கு ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதிரடி காட்டும் ட்ரம்ப் :
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து ட்ரம்ப் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்கா வாழ் வெளிநாட்டவர்களுக்கு கட்டுப்பாடு, குடியேற்ற பிரச்சினை, இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு என அவரது நடவடிக்கைகள் நீளுகின்றன.
இதனால், அமெரிக்காவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. வல்லரசு நாடான ரஷ்யா மீதான கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தும் வகையில் புதிய மசோதா ஒன்றை அமெரிக்க கொண்டு வந்துள்ளது.
ரஷ்யாவை கட்டுப்படுத்த திட்டம் :
செனட் சபையில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவை ஆதரித்து பேசிய செனட்டர் லிண்ட்சே கிரஹாம், “இந்த மசோதாவை வாக்கெடுப்புக்கு கொண்டு வர வேண்டும் என்று ட்ரம்ப் என்னிடம் கூறினார். உக்ரைன் மீதான போரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பேச்சுவார்த்தைக்கு கொண்டு வரும் ஒரு கருவியாக இந்த முயற்சி இருக்கும்.
இந்திய பொருட்களுக்கு 500% வரி :
அதிபர் ட்ரம்பின் இந்த முடிவு உலகளவில் ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும். நீங்கள் ரஷ்யாவிலிருந்து பொருட்களை வாங்குகிறீர்கள், ஆனால், உக்ரைனுக்கு உதவவில்லை என்றால், அமெரிக்காவிற்குள் வரும் உங்கள் தயாரிப்புகளுக்கு 500% வரி விதிக்கப்படும் என்பதுதான் இந்த மசோதாவின் அடிப்படை.
இந்தியாவும், சீனாவும் ரஷ்யாவிடம் இருந்து, 70% கச்சா எண்ணெய் வாங்குகின்றன. அவர்கள் புதினின் போர் இயந்திரத்தைத் தொடர்ந்து இயக்குகிறார்கள். ரஷ்யா மீதான இந்த தடைகள் மசோதா, நிச்சயம் நிறைவேறும்” என்று கூறினார்.
இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படும் :
எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மையத்தின் தகவல்களின்படி, மே 2025ல் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களை வாங்கும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. மே மாதத்தில் இந்தியா, ரஷ்யாவிலிருந்து 4.2 பில்லியன் யூரோ மதிப்புள்ள புதைபடிவ எரிபொருட்களை வாங்கியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா கொண்டு வந்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை, இந்திய ஏற்றுமதியில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது
====