Venezuela Earthquake: Man rescued alive from the rubble after 8 days – a miracle that moved the world! Google,ai
உலகம்

வெனிசுலா நிலநடுக்கம் : 8 நாட்களுக்குப் பின் இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட நபர் : உலகையே நெகிழ வைத்த அதிசயம்!

வெனிசுலாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்க இடிபாடுகளுக்குள் 8 நாட்களாகச் சிக்கியிருந்த பாதுகாப்பு காவலர் புளோரஸ், சர்வதேச மீட்புக் குழுவினரால் அதிசயத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

Kavitha prasanna

Venezuela Earthquake: Man rescued alive from the rubble after 8 days – a miracle that moved the world!

வெனிசுலாவின் வடமேற்குப் பகுதியில் கடந்த ஜூன் 24 அன்று ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 என அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பெரும் பேரழிவை ஏற்படுத்தின. இந்த இயற்கை சீற்றத்தால் 2,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மேலும் 11,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமான நிலையில், லா குவைரா மாநிலம் முழுவதும் மிகவும் மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது.

துயரத்திற்கு மத்தியிலும் தலைதூக்கிய மனிதநேயம்

இந்த சோகத்திற்கு மத்தியிலும், ஒட்டுமொத்த உலகிற்கும் நம்பிக்கை அளிக்கும் ஒரு அதிசய நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. லா குவைரா கடலோரப் பகுதியில் உள்ள 'கேலரியாஸ் பிளாயா கிராண்டே' வணிக வளாகத்தின் அடித்தள இடிபாடுகளுக்குள் 8 நாட்களாகச் சிக்கியிருந்த 43 வயது பாதுகாப்பு காவலரான ’புளோரஸ்’ என்பவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

சவாலான மீட்புப் பணியில் பல்வேறு நாடுகள் மீட்புக்குழு வீரர்கள்

பொதுவாகப் பேரிடர் காலங்களில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் 72 மணி நேரம் வரை மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இடுபாடுகளுக்குள் சிக்கிய புளோரஸ் இருந்த சிறிய பாதுகாப்பு அறை கான்கிரீட் சரிவிலிருந்து அவரைக் காப்பாற்றியதோடு, காற்றோட்டத்தையும் தந்துள்ளது.

இரவு,பகலாக போராட்டம்

சிலி நாட்டு தீயணைப்புப் படையினரின் ஒருங்கிணைப்பில் அமெரிக்கா, போர்ச்சுகல், மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மீட்புக் குழுவினர் இரவு பகலாகப் போராடினர்.

தொடர் மழை, நில அதிர்வுகள் போன்ற சவால்களுக்கு இடையே, டெலஸ்கோபிக் கேமராக்கள் மூலம் அவரைப் படம் பிடித்து, சிறிய துளை வழியாகத் திரவ உணவும் தண்ணீரும் வழங்கி அவரை உயிருடன் வைத்திருந்தனர்.

100 மணி நேரத்திற்கும் மேலான போராட்டம்

மீட்புப் பணியின் போது சிலி நாட்டைச் சேர்ந்த தீயணைப்பு வீராங்கனை மரியா பாஸ் காம்போஸ் தொடர்ந்து புளோரஸிடம் பேசி அவருக்கு மன தைரியத்தை அளித்துள்ளார்.

"நான் பிழைக்காமல் போனால் என் மனைவியிடம் இந்த தகவலை சொல்ல வேண்டாம்" என்று புளோரஸ் அச்சத்துடன் கூறியபோதும், மீட்புக் குழுவினர் கைவிடாமல் 100 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி சுரங்கம் தோண்டி அவரை மீட்டனர்.

உயிருடன் மீட்கப்பட்ட புளோரஸ்: கொண்டாடிய சர்வதேச மீட்புக் குழுவினர்

அவர் ஸ்ட்ரெச்சரில் கொண்டு வரப்பட்ட போது, சர்வதேச மீட்புக் குழுவினர் கொடிகளை அசைத்து, கைதட்டி தங்களின் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.

புளோரசின் மனைவி நன்றி

கணவர் மீட்கப்பட்ட செய்தியறிந்து அவரது மனைவி குஸ்பிமார் கோன்சலஸ் மற்றும் இரு குழந்தைகள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் நன்றி தெரிவித்துள்ளனர்.

அரசு மீதான விமர்சனங்கள் ஒருபுறமிருக்க, வெனிசுலாவின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், "இது மனிதநேயத்தின் மகத்தான வெற்றி; ஒரு உயிரைக் காக்க ஒன்றுதிரண்ட உலக நாடுகளுக்கு நன்றி" என தனது சமூக ஊடகப் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

=====